அருளோடு எழுந்தருளிவந்த, வெம்கொங்கு அலர் தெரியலாய் - விருப்பத்தை யுண்டுபண்ணுகின்ற மணம்விளங்கும் மாலையைப் புனைந்த அரசனே!, கொற்றம் கொள்க என - நீ வெற்றியை அடைவாயாக என்று, ஆசி கூறினான் - வாழ்த்துரை வழங்கினான் (எ - று.) நிமித்திகனை அரசன் தன்மனைக்கு வருமாறு அழைத்து உசாவ லாகாதோ? நடந்து நிமித்திகன் மனைக்குச் செல்வானேன்? சதவிந்து நிமித்திகன் பேரறிவாளன்; முக்கால உணர்ச்சியையும் பெற்றவன்; அவன் தகுதிவாய்ந்த மெய்யறிவாளனாக விளங்குதலின், அவனைத் தன் மனைக்கு அழைப்பதற்கு அரசன் துணியவில்லை. சடியரசன் அறிவாளியாதலின் அறிஞரிடத்திலே நடந்துகொள்ள வேண்டிய முறைப்படி நடந்து கொண்டான். |
(இ - ள்.) மன்னன் - அரசன், கொண்டு அமர்ந்து - நிமித்திகன் கூறிய வாழ்த்துரையை மனமுவந்து கொண்டு விருப்பத்துடன், அகில்புகை கழுமி - அகில்புகை நிரம்பி, கோதைவாய் விண்டு - மாலையின் மலர்கள் நன்குவிரிந்து, மதுக்கள் அமர்ந்து ஒழுகுவ - தேன்துளிகள் நெருக்கமாகச் சிந்துவனவற்றின் மேல், வண்டு அமர்ந்து வீழ்ந்து உராய் ஒலி செய - வண்டுக்கூட்டங்கள் விரும்பி உலாவி முரலாநிற்பக் காரணமான, மருங்குல் கொண்டது ஓர் மண்டபமணித்தலம் எய்தினான் - பக்கங்களையுடையதாய் அமைந்துள்ள மண்டபத்தின்கண் அழகிய ஓர் இடத்தை அரசன் சேர்ந்தான் (எ - று.) |