(இ - ள்.) பொய்ம்மை இல் புகழ் அவன் - மெய்ம்மையான புகழை யுடையவனாகிய சுவலனசடியரசன், அம்மயில் அனையவள் திறத்தில் - அழகிய மயிலையொத்தவளாகிய சுயம்பிரபையின் செயலில், ஆரியன் - மேலானவனாகிய நிமித்திகன், செம்மையில் விளம்பிய - சிறப்பாகக் கூறிய, செல்வம் கேட்டலும் - பெருமையமைந்த மொழிச் செல்வத்தைக்கேட்ட அளவில், மெய்ம்மையில் தெரிந்து - நிமித்திகன் கூறியமொழி உண்மையாகவே இருக்கவேண்டுமென்பதை யுணர்ந்து, ஒளி துளும்பும் மேனியன் - விளக்கம் நிறைந்த உடலையுடையவனாய், பொலிந்து தோன்றினான் - மகிழ்ச்சி மிகுந்து காணப்பட்டான் (எ - று.) மிகுந்த நன்மையை உண்டாக்கும் மொழியும் செல்வம் போன்ற தாகலின் விளம்பிய செல்வம் என்றார். “செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம், செல்வத்துள் எல்லாம் தலை“ என்று திருவள்ளுவர் கூறுதலும் காண்க. |
(இ - ள்.) முன்னிய உலகுகள் விடுத்த மூர்த்தியான் - பெருமையாக எண்ணப்பெற்ற உலகங்களைத் துறந்தவனாகிய அருக பரமேட்டிகள் திருவாய் மலர்ந்தருளிய, மன்னிய திருமொழி அகத்து - நிலைபெற்ற மாபுராணத்திலே, மாதராள் - சுயம்பிரபையைப்பற்றி, விரிந்தவாறு என்னை எனலும் - விரித்துக் கூறப்பட்ட வரலாறு எவ்வாறு என்று கேட்டலும், மன்னனுக்கு - அரசனுக்கு, அன்னவன் - சதவிந்து, ஆதிமாபுராணம் ஓதினான் - முதன்மையமைந்த மாபுராணத்திலே கூறப்பட்ட வரலாற்றைக் கூறலானான் (எ - று.) வரலாறு கூறுதலை இனிவருஞ் செய்யுள்களில் காண்க. முன்னிய உலகு கண்விடுத்த மூர்த்தியான் என்பதற்குத், தன்னைக் கருதிய சான்றோருடைய அகக்கண்ணைத் திறந்தருளிய திருவுருவத்தை யுடைய இறைவன் எனினுமாம். |