பக்கம் : 284
 

     (இ - ள்.) பொய்ம்மை இல் புகழ் அவன் - மெய்ம்மையான புகழை யுடையவனாகிய
சுவலனசடியரசன், அம்மயில் அனையவள் திறத்தில் - அழகிய மயிலையொத்தவளாகிய
சுயம்பிரபையின் செயலில், ஆரியன் - மேலானவனாகிய நிமித்திகன், செம்மையில்
விளம்பிய - சிறப்பாகக் கூறிய, செல்வம் கேட்டலும் - பெருமையமைந்த மொழிச்
செல்வத்தைக்கேட்ட அளவில், மெய்ம்மையில் தெரிந்து - நிமித்திகன் கூறியமொழி
உண்மையாகவே இருக்கவேண்டுமென்பதை யுணர்ந்து, ஒளி துளும்பும் மேனியன் -
விளக்கம் நிறைந்த உடலையுடையவனாய், பொலிந்து தோன்றினான் - மகிழ்ச்சி மிகுந்து
காணப்பட்டான் (எ - று.)

மிகுந்த நன்மையை உண்டாக்கும் மொழியும் செல்வம் போன்ற தாகலின் விளம்பிய
செல்வம் என்றார். “செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம், செல்வத்துள்
எல்லாம் தலை“ என்று திருவள்ளுவர் கூறுதலும் காண்க.

( 148 )

மாபுராணத்தில் கூறப்பட்டிருத்தலைப்பற்றி அரசன் கேட்டல்

387. முன்னிய வுலகுகண் விடுத்த மூர்த்தியான்
மன்னிய திருமொழி யகத்து மாதராள்
என்னைகொல் விரிந்தவா றெனலு மன்னனுக்
கன்னவ னாதிமா புராண மோதினான்.
 

      (இ - ள்.) முன்னிய உலகுகள் விடுத்த மூர்த்தியான் - பெருமையாக
எண்ணப்பெற்ற உலகங்களைத் துறந்தவனாகிய அருக பரமேட்டிகள் திருவாய்
மலர்ந்தருளிய, மன்னிய திருமொழி அகத்து - நிலைபெற்ற மாபுராணத்திலே, மாதராள் -
சுயம்பிரபையைப்பற்றி, விரிந்தவாறு என்னை எனலும் - விரித்துக் கூறப்பட்ட வரலாறு
எவ்வாறு என்று கேட்டலும், மன்னனுக்கு - அரசனுக்கு, அன்னவன் - சதவிந்து,
ஆதிமாபுராணம் ஓதினான் - முதன்மையமைந்த மாபுராணத்திலே கூறப்பட்ட வரலாற்றைக்
கூறலானான் (எ - று.)

வரலாறு கூறுதலை இனிவருஞ் செய்யுள்களில் காண்க.

முன்னிய உலகு கண்விடுத்த மூர்த்தியான் என்பதற்குத், தன்னைக் கருதிய சான்றோருடைய
அகக்கண்ணைத் திறந்தருளிய திருவுருவத்தை யுடைய இறைவன் எனினுமாம்.

( 149 )