பக்கம் : 288
 

ஞாயிறு திங்கள் முதலியவைகளை நான்முகனார் படைத்தனர். இவ்வாறு போக காலம்
போயது என்க.

( 155 )

அருகக் கடவுள் தோற்றம்

394. ஊழிமூன் றாவதோய்ந் திறுதி மன்னுயிர்
சூழ்துயர் பலகெடச் சோதி மூர்த்தியாய்
ஏழுய ருலகுடன் பரவ வீண்டருள்
ஆழியங் கிழமையெம் மடிக டோன்றினார்.
 

     (இ - ள்.) ஊழி மூன்றாவது ஓய்ந்து - ஊழிக்காலமானது மூன்றாவது முடிவுபெற்று,
இறுதி - அதன் பிறகு, மன்உயிர் சூழ்துயர் பலகெட - தோன்றி நிலைபெற்ற
உயிர்த்தொகைகளைச் சூழ்ந்துள்ள துன்பங்கள் அனைத்தும் ஒழிய, ஆழி அம்கிழமை எம்
அடிகள் - அழகிய அறவாழியை உரிமையாகத் தாங்கிய எம்முடைய அருகக் கடவுள்,
ஈண்டு அருள் சோதி மூர்த்தியாய் தோன்றினார் - இவ்வுலகத்திற்கு அருள்புரிகின்ற ஒளி
வடிவினராக எழுந்தருளினார் (எ - று.)

பலவும் எனல் வேண்டிய முற்றும்மை விகாரத்தால் தொக்கது. சோதிமூர்த்தி -
ஒளிவடிவினன். ஆழி - அறவாழி. அடிகள் - அருகக் கடவுள்.

( 156 )

உலகம் அருகக் கடவுளின் வழிப்பட்டது

395. ஆரரு டழுவிய வாழிக் காதியாம்
பேரருண் மருவிய பிரான்றன் சேவடி
காரிருள் கழிதரக் கண்க வின்றரோ
சீரருள் சரணென வுலகஞ் சேர்ந்ததே.
 

     (இ - ள்.) உலகம் - இவ்வுலகத்தினர், ஆர் அருள் தழுவிய ஆழிக்கு ஆதியாம் - நிறைந்த பேரருள் பொருந்திய அறவாழிக்கு முதல்வனாகிய, பேர் அருள் மருவியபிரான் தன் சேவடி - சீர்த்தி மிகுந்த திருவருள் பொருந்திய அருகக் கடவுளுடைய சேவடிகளை, கார்இருள் கழிதர - தம்மைப்பற்றியுள்ள அறிவின்மையானது நீங்க, கண் கவின்று - கண்ணாற் கண்டு போற்றிசெய்து, சீர் அருள் - எங்கட்குச் சிறப்பினைக் கொடுத்தருள்வாயாக, சரண்எனச் சேர்ந்தது - நாங்கள் உனக்கு அடைக்கலம் என்று கூறி அடைந்தனர் (எ - று.)