பக்கம் : 290
 

     (இ - ள்.) அவன் திருவருள் அலரச்சூடிய - அந்த அருகக் கடவுளுடைய
திருவருளை மிகத்தாங்கிய, வீங்கிய விரிதிரை வேலி காவலன் - பெரிய கடலாலே
சூழப்பெற்ற உலகத்தைப் பாதுகாப்பவனான, பாங்கு உயர்பரிதி வேல் பரதன் - பண்புயர்ந்த
ஒளிவேலையுடைய பரதன் என்பவன், ஓங்கிய நெடுங்குடை ஒருவன் ஆயினான் - புகழால்
உயர்ந்த நெடிய ஒருகுடை நிழற்றும் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தனன், என்ப - என்று
உலகினர் கூறுவார்கள் (எ - று.)

பரதன் என்பவன் திருவருள் பெற்றவனாகவும், சக்கரவர்த்தியாகவும் ஆயினான் என்றபடி.
பரதன் சக்கரவர்த்திகள் பன்னிருவருள் முதல்வன். அவன் திருவருள் அலரச்சூடிய என்றது
ஒருவன் ஆதற்குக் குறிப்பேதுவாய் நின்றது. விரிதிரைவேலி - உலகம். ஓங்கிய
நெடுங்குடை என்றது - பலகுடை நீழலும் தன்னீழலிற் கொண்ட ஒற்றைவெண்
கொற்றக்குடை என்பதுபட நின்றது. எனவே, சக்கரவர்த்தி ஆயினான் என்றாராயிற்று.

( 159 )

398. ஆழியா லகலிடம் வணக்கி யாண்டவன்
பாழியா நவின்றதோட் பரத னாங்கொர்நாள்
ஊழியா னொளிமல ருருவச் சேவடி
சூழிமால் யானையான் றொழுது வாழ்த்தினான்.
 

      (இ - ள்.) சூழிமால் யானையான் - முகபடாத்தை யணிந்த பெரிய
யானையையுடையவனும், ஆழியால் அகல்இடம் வணக்கி ஆண்டவன் -
ஆணையுருளையினாலே நிலவுலகத்தை வணங்கச் செய்து அரசாட்சி செய்தவனும், ஆகிய
பாழியா நவின்ற தோள் பரதன் - பெருமையாகப் பேசப்பெற்ற தோளையுடைய அப்பரதன்,
ஒர்நாள் - ஒருநாள், ஊழியான் ஒளிமலர் உருவச் சேவடி - ஊழிக்காலத்திலு
மழியாதவனாகிய அருகக்கடவுளது ஒளி விரியாநின்ற அழகிய திருவடிகளை, தொழுது
வாழ்த்தினான் - வணங்கிப் போற்றினான். ஆங்கு, அசைநிலை (எ - று.)

ஆழி - ஆணைச்சக்கரம். அகலிடம் - உலகம். பாழி - பெருமை. ஊழியான் - அருகன்.
ஒளிமலர் சேவடி என்க. வினைத்தொகை. ஆண்டவனும், யானையானும், ஆகிய பரதன்
என்க.

( 160 )