(இ - ள்.) அவன் திருவருள் அலரச்சூடிய - அந்த அருகக் கடவுளுடைய திருவருளை மிகத்தாங்கிய, வீங்கிய விரிதிரை வேலி காவலன் - பெரிய கடலாலே சூழப்பெற்ற உலகத்தைப் பாதுகாப்பவனான, பாங்கு உயர்பரிதி வேல் பரதன் - பண்புயர்ந்த ஒளிவேலையுடைய பரதன் என்பவன், ஓங்கிய நெடுங்குடை ஒருவன் ஆயினான் - புகழால் உயர்ந்த நெடிய ஒருகுடை நிழற்றும் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தனன், என்ப - என்று உலகினர் கூறுவார்கள் (எ - று.) பரதன் என்பவன் திருவருள் பெற்றவனாகவும், சக்கரவர்த்தியாகவும் ஆயினான் என்றபடி. பரதன் சக்கரவர்த்திகள் பன்னிருவருள் முதல்வன். அவன் திருவருள் அலரச்சூடிய என்றது ஒருவன் ஆதற்குக் குறிப்பேதுவாய் நின்றது. விரிதிரைவேலி - உலகம். ஓங்கிய நெடுங்குடை என்றது - பலகுடை நீழலும் தன்னீழலிற் கொண்ட ஒற்றைவெண் கொற்றக்குடை என்பதுபட நின்றது. எனவே, சக்கரவர்த்தி ஆயினான் என்றாராயிற்று. |
(இ - ள்.) சூழிமால் யானையான் - முகபடாத்தை யணிந்த பெரிய யானையையுடையவனும், ஆழியால் அகல்இடம் வணக்கி ஆண்டவன் - ஆணையுருளையினாலே நிலவுலகத்தை வணங்கச் செய்து அரசாட்சி செய்தவனும், ஆகிய பாழியா நவின்ற தோள் பரதன் - பெருமையாகப் பேசப்பெற்ற தோளையுடைய அப்பரதன், ஒர்நாள் - ஒருநாள், ஊழியான் ஒளிமலர் உருவச் சேவடி - ஊழிக்காலத்திலு மழியாதவனாகிய அருகக்கடவுளது ஒளி விரியாநின்ற அழகிய திருவடிகளை, தொழுது வாழ்த்தினான் - வணங்கிப் போற்றினான். ஆங்கு, அசைநிலை (எ - று.) ஆழி - ஆணைச்சக்கரம். அகலிடம் - உலகம். பாழி - பெருமை. ஊழியான் - அருகன். ஒளிமலர் சேவடி என்க. வினைத்தொகை. ஆண்டவனும், யானையானும், ஆகிய பரதன் என்க. |