பக்கம் : 291
 

பரதன் அருகக்கடவுளைப் போற்றி எதிர்கால நிகழ்ச்சி கேட்டல்

399. கதிரணி மணிமுடி வணங்கிக் காவலன்
எதிரது வினவினா னிறைவன் செப்பினான்
அதிர்தரு விசும்பிடை யமிர்த மாரிசோர்
முதிர்தரு முகிலிடை முழங்கிற் றென்னவே.
 

     (இ - ள்.) கதிர்அணி மணிமுடி வணங்கி - ஒளிதங்கிய அழகிய மணிகள்பதித்துச்
செய்யப்பெற்ற முடியைத் தாழ்த்தி வணங்கி, காவலன் எதிரது வினவினான் - பரதனானவன்
எதிர்கால நிகழ்ச்சிகளைப்பற்றிக் கேட்டான், அதிர்தரு விசும்பிடை - முழக்கத்தையுடைய
விண்ணின்கண், அமிர்தமாரி சோர் முதிர்தரு முகிலிடை - அமுதத்தை யொத்த மழையைப்
பொழியும் நிறைந்த சூலினையுடைய முகிலிடை, முழங்கிற்று என்ன - முழக்கமுண்டானாற்
போன்று, இறைவன் செப்பினான் - அருகக் கடவுள் அவ்வினாக்கட்கு விடைகூறி
யருளினான் (எ - று.)
முகிலிடை முழங்கினாற் போன்று இறைவன் செப்பினான் என்க.

( 191 )

அருகக் கடவுள் கூறுதல்

400. என்முத லிருபத்தீ ரிருவர் நாதர்கள்
நின்முத லீரறு வகையர் நேமியர்
மன்முதல் 1பலவர்கே சவர்கண் மாற்றவர்
2தொன்முத லவர்தொகை யொன்ப 3தொன்பதே.
 

     (இ - ள்.) என்முதல் இருபத்து ஈர்இருவர் நாதர்கள் - என்னை முதலாகக்கொண்டு
இருபத்துநான்கு பேர்கள் நாதர்களாவார்கள், நின்முதல் ஈர் அறுவகையர் நேமியர் -
உன்னை முதலாகக்கொண்டு பன்னிரண்டு பெயர்கள் ஆழியாணையாளர்
(சக்கரவர்த்தி)களாக வருவார்கள், மன்முதல் பலவர் கேசவர்கள் - அரசர்களாகிய
பலதேவர்களும் வாசுதேவர்களும், மாற்றவர் - பிரதிவாசுதேவர்களாகிய பகைவர்களும்
ஆகிய, தொன்முதல் அவர் தொகை ஒன்பது ஒன்பதே - பழைமை யுடைய இத்தலைவர்
தொகைகள் தனித்தனி ஒன்பது என்பர் (எ - று.)


 (பாடம்) 1. பலவகே. 2. கொன்முத. 3. என்பவே.