(இ - ள்.) போதுசேர் அலங்கலாய் - மலர்கள் பொருந்திய மாலையை யுடையவனே! ஓதநீர் உலகுடை உரிமை - ஒலிக்கின்ற கடலாலே சூழப்பெற்ற உலகத்தைப் பெற்றுள்ள உரிமை, ஆதியும் அந்தமும் நடுவும் நம்மதே என்று - முதலிலும் இறுதியிலும் நடுவிலும் நம்முடையதாகவே அமைந்துள்ளது என்று, காதுவேல் அரசர் கோக் களிப்புற்றான் - கொலை செய்கின்ற வேற்படையை உடைய மன்னர்களின் மன்னனாகிய பரதன் மகிழ்ச்சியை அடைந்தான். இது புராண நீர்மையே - இதுமா புராணத்தில் கூறப்பட்ட வரலாறாகும். அரோ, அசை நிலை (எ - று.) அரசர்கோ என்றது பரத சக்கரவர்த்தியை. அலங்கலாய் என்றது நிமித்திகன், சடியை விளித்தது. புராணம். மாபுராணம் |
(இ - ள்.) அன்னணம் புராணநூல் அகத்துத் தோன்றிய - அவ்வாறு மாபுராண நூலினிடத்திலே சொல்லப்பெற்ற, கல் நவில் இலங்குதோள் காளையானவன் - கல்தூண் போன்று விளங்கும் தோளையுடைய மருசி, மின் நவில் விசும்பில் நின்று இழிந்து - ஒளி விளங்குகின்ற விண்ணில் நின்றும் இறங்கி வீங்குநீர் மன்னிய வரைப்பகம் - மிகுந்த நீர் பொருந்திய கடலானது நிலைபெற்ற நிலவுலகத்தில், மலிரத்தோன்றினான் - சீர்த்தியானது மிகும்படி திவிட்டனாகப் பிறந்தான் (எ - று.) காளை - மருசி. திவிட்டனாய்த் தோன்றினான் என்க. |