(இ - ள்.) மன்னவன் பெயர்ந்துபோய் - சுவலனசடியரசனானவன் திரும்பிச் சென்று, வாயுவேகை தன் பொன்நகர் புக்கனன் - தன் மனைவியாகிய வாயுவேகை அமர்ந்திருக்கின்ற அழகிய அந்தப்புரத்தை அடைந்தான். பொழுதும் சென்றது - அப்பொழுது கதிரவனும் மறைந்தான், கன்னி தன் பெருமையும் - சுயம்பிரபையினுடைய சிறப்பையும், கருமச் சூழ்ச்சியும் - திருமணத்தைப்பற்றி நேர்ந்துள்ள செய்தியையும், அன்னம் மென்நடை அவட்கு - அன்னத்தின் அழகிய நடையைப்போன்றமைந்த நடையையுடைய அவளுக்கு, அறியக் கூறினான் - நன்கு தெரியுமாறு சொன்னான் (எ - று.) அந்தப்புரத்தை அடைந்த அரசன் தன்மனைவி வாயுவேகைக்குச் செய்தி கூறினான் என்றபடி. கன்னி - சுயம்பிரபை. நடையவள் - வாயுவேகை. |