பக்கம் : 298
 

     (இ - ள்.) இருநிலத் தலைமகன் - பின்னர் பெரிய உலகத்தை ஆளும் அச்சடி
மன்னன், செம்பொன் மாரியா சொரி நிதி - செம்பொன்னையே மழையாகப் பொழியாநின்ற
செல்வத்தையும், புனல் உடை - நீர்வளத்தையும் உடைய, சோதிமாலை என்று -
சோதிமாலை என்று பெயர் கூறப்பட்ட, அருநிதி வளம் கொள் - பெறுதற்கரிய செல்வ
வளமிக்கதொரு நாட்டை, நூல் கடல் திருநிதிச் செல்வன் ஆள - நூலாகிய கடலிலே
தோன்றும் அழகிய அறிவுச்செல்வத்தை யுடையவனான அச் சதவிந்து என்பான் ஆளும்படி,
நல்கினான்-முற்றூட்டாக வழங்கினான் (எ - று.)

குறியுரைத்த நிமித்திகனுக்கு நன்கொடையாகச் சோதிமாலை என்னும் நாட்டை நன்கொடை
வழங்கினான் சடியரசன் என்க. என்று - என்ற.

( 173 )

அரசன் தன்மனைவி வாயுவேகைக்குச் செய்தி கூறுவித்தல்

412. மன்னவன் பெயர்ந்துபோய் வாயு வேகைதன்
பொன்னகர் புக்கனன் பொழுதுஞ் சென்றது
கன்னிதன் பெருமையுங் கருமச் சூழ்ச்சியும்
அன்னமென் னடையவட் கறியக் கூறினான்.
 

      (இ - ள்.) மன்னவன் பெயர்ந்துபோய் - சுவலனசடியரசனானவன் திரும்பிச்
சென்று, வாயுவேகை தன் பொன்நகர் புக்கனன் - தன் மனைவியாகிய வாயுவேகை
அமர்ந்திருக்கின்ற அழகிய அந்தப்புரத்தை அடைந்தான். பொழுதும் சென்றது -
அப்பொழுது கதிரவனும் மறைந்தான், கன்னி தன் பெருமையும் - சுயம்பிரபையினுடைய
சிறப்பையும், கருமச் சூழ்ச்சியும் - திருமணத்தைப்பற்றி நேர்ந்துள்ள செய்தியையும்,
அன்னம் மென்நடை அவட்கு - அன்னத்தின் அழகிய நடையைப்போன்றமைந்த
நடையையுடைய அவளுக்கு, அறியக் கூறினான் - நன்கு தெரியுமாறு சொன்னான் (எ - று.)

அந்தப்புரத்தை அடைந்த அரசன் தன்மனைவி வாயுவேகைக்குச் செய்தி கூறினான்
என்றபடி.

கன்னி - சுயம்பிரபை. நடையவள் - வாயுவேகை.

( 174 )