(இ - ள்.) துள் இலாச் சுடர்மணி துளும்பு பூணினாய் - குற்றமற்ற ஒளி பொருந்திய மணிகள் அசைகின்ற அணிகலன்களையணிந்தவளே, தகளிவாய்க் கொழுஞ்சுடர் தனித்தும் - அகலினிடத்திலே ஏற்றப்பெற்ற கொழுவிய விளக்கொளியானது தனித்து நின்றாலும், கோழ் இருள் நிகளவாய்ப்பிளந்து - மிகுந்த இருளை நீளமாகப் பிளந்து, அகம் சுடர நிற்கும் - இல்லமானது ஒளிபெற விளங்கும், அதைப்போல, மகள் எலாத் திசைகளும் மலிர மன்னினாள் - நம்முடைய மகளானவள் எல்லாத்திக்குகளினுந் தனது சீர்த்தியானது விளங்கும்படி நிலை பெற்று நின்றாள் (எ - று.) நங்குலத்தில் நாமனைவரும் புகழற்றவர்களாக இருக்கவும், நம் மகள் மட்டும் பெரும் புகழுக்கு உரியவளாக விளங்குகின்றாள் என்று; தன் மனைவிக்குத் தெரிவிக்க விரும்பிய அரசன் இவ்வாறு கூறினான். |
(இ - ள்.) நாமநீர் - கற்புச் சிறப்பினாலே கண்டார்க்கு அச்சத்தை யுண்டாக்குந் தன்மை யமைந்திருத்தலுடன், பொலம்புரி மயிலனாய் - பொன்னாற் செய்யப்பட்ட மயிலைப் போன்றவளே! வலம்புரி வயிற்றிடைப் பிறந்த மாமணி - வலம்புரிச் சங்கினிடத்திலே தோன்றிய சிறந்த மணியானது, நலம் புரிபவித்திரமாகும் - நன்மையைச் செய்கின்ற உயர்ந்ததாகும், அதைப்போல, பயந்த பூங்கொடி - நீ பெற்ற மகளான பூங்கொடியைப் போன்ற சுயம்பிரபை, குலம்புரிந்தவர்க்கு எலாம் கோலமாகும் - நம்முடைய குலத்தை விரும்பிய எல்லோருக்கும் அணியாகத் திகழ்வாள் (எ - று.) வாயுவேகையின் மாண்பு கருதி வலம்புரி கூறினான். மணி - முத்து. பவித்திரம் - தூயது; சிறந்ததுமாம், நாமம் - அச்சம்; நாம நீர் வலம்புரி என ஒட்டிக் கடல் எனினுமாம். பொலம்புரி மயில் - பொன்னாற் செய்த மயில். கோலம் - அணி. |