பக்கம் : 304
 

     (இ - ள்.) மின் அவிர் மணி முடி வேந்தர் வேந்த - ஒளி விளங்குகின்ற மணிகள்
பதித்துச் செய்யப்பட்ட முடியினையுடைய மன்னர்கட்கு மன்னனாக விளங்கும் மன்னனே!
இக்கன்னி நின் அருளினே கருதப்பட்டனள் - கன்னிகையாகிய இந்தச் சுயம்பிரபையானவள்
உன்னுடைய அருளினால்தான் பெருமையுடையவளாக மதிக்கப்பட்டாள், மன்னவ அருள்
இலர் ஆயின் - அரசர்கள் அருளற்ற கொடுங்கோலர்களாக இருப்பார்களாயின், அவர்
மக்களும் பின் பெறுவது ஓர் பெருமை இல்லை - அந்த அரசர்களுடைய மக்களும் பிறகு
அடையக்கூடிய ஒருவகையான பெருமையும் இல்லை (எ - று.)

மன்னர்களுடைய பெருமையே அவர்களுடைய மக்களுக்கும் என்க.

( 183 )

இதுவும் அது

422. பிடிகளை மகிழ்களிற் 1றரசர் பெய்ம்மலர்
முடிகளின் மணிபொர முரலு மொய்கழல்
அடிகள தருளினா லம்மென் சாயலிக்
கடிகமழ் குழலினாள் கவினு மெய்தினாள்.
 

      (இ - ள்.) பிடிகளை மகிழ் களிற்று அரசர் - பெண் யானைகளை மகிழ்விக்கின்ற
ஆண் யானைகளையுடைய அரசர்கள், பெய்ம்மலர் முடிகளின் மணி பொர - பெய்யப்பட்ட
மலர்களையுடைய முடிகளின் கண் பதித்துள்ள மணிகள் பணியும்போது தாக்குதலால்,
முரலும் மொய்கழல் - ஒலிக்கின்ற வீரக்கழலையணிந்த, அடிகளது அருளினால் -
சுவாமிகளாகிய தங்களுடைய அருளால், அம்மென் சாயல் - அழகிய மென்மையையும்
சாயலையுமுடைய, இக்கடிகமழ் குழலினாள் - மணங்கமழ்கின்ற கூந்தலையுடைய இந்தச்
சுயம்பிரபை, கவினும் எய்தினாள் - அழகையும் அடைந்தாள் (எ - று.)

( 184 )

அரசன் இன்புற்றிருத்தல்

423. திருமனைக் கிழத்தி தன் றேங்கொள் சின்மொழி
மருமணி முடியினான் மகிழ்ந்து மற்றவள்
பருமணிப் பூண்முலை பாய மார்பிடை
அருமணித் தெரியறே னழிய வைகினான்.
 

 (பாடம்) 1. அரச.