பக்கம் : 307
 

மேலே நடக்கவேண்டிய செயல்கட்குத் தூது அனுப்ப வேண்டியது இன்றியமையாத
தாகலின், தூதுவனைப் பயாபதி மன்னன்பால் அனுப்புவோம் என்கின்றனர்.

( 188 )

மரீசியே தூது செல்வதற்கு ஏற்றவன் என்றல்

427. 1கற்றவன் கற்றவன் கருதுங் கட்டுரைக்
2குற்றன வுற்றவுய்த் துரைக்கு மாற்றலான்
மற்றவன் மருசியே யவனை நாம்விடச்
சுற்றமுங் கருமமுஞ் சொல்ல வல்லனே.
 

     (இ - ள்.) கற்றவன் - எல்லா நூல்களையும் நன்கு கற்றவன், கற்றவன் கருதும்
கட்டுரைக்கு - கற்றவனாகிய பிறனொருவன் கருதியுரைக்கும் உறுதியான சொல்லுக்கு,
உற்றனஉற்ற - நன்கு பொருந்துபவைகளை, உய்த்து உரைக்கும் ஆற்றலான் - நன்கு
ஆராய்ச்சி செய்து சொல்லும் அறிவாற்றலுடையவன், அவன் - இத்தன்மைகளெல்லாம்
இனிதமைந்த அவன், மருசியே - மருசியென்பவனேயாவன், அவனை நாம் விட - அவனை
நாம் தூதாக அனுப்பினால், சுற்றமுங் கருமமும் சொல்ல வல்லன் - நமக்கும் பயாபதி
மன்னனுக்கும் ஏற்படப்போகிற உறவு முறையையும் செய்தியையும் விளக்கமாகச்
சொல்லுதற்கு வல்லவனாவன், (எ - று.)

( 189 )

மரீசியைத் தூது அனுப்புதல்

428. காரியந் 3துணிந்தவர் மொழியக் காவலன்
மாரியந் தடக்கையான் வருக வென்றொரு
சீரிய திருமுகஞ் சிறப்பொ டீந்தனன்
ஆரியன் கழலடி யவனும் வாழ்த்தினான்.
 

     (இ - ள்.) காரியம் துணிந்தவர் மொழிய - செயலினை மேற்கொண்டு இவ்வாறு
செய்வோ மென்று உறுதி செய்தவராகிய அமைச்சர் மேற்கூறிய வாறு சொல்லவும், காவலன்
- அரசன், மாரி அம் தடக்கையான் வருக என்று


  (பாடம்) 1. கற்றவர் கற்றன கருதும். 2. உற்றன உற்றன. 3. துணிந்தவன்.