பக்கம் : 317
 

விஞ்சையர் தூதுவனாகியமரீசி அசோகமரம்
ஒன்றைக் காணல்

439. புனல்விரவிய துளிர்பிதிர்வது புரிமுத்தணி 1மணல்மேல்
மினல்விரவிய சுடர்பொன்னொளிர் மிளிர்வேதிகை 2மிகை யொண்
கனல்விரவிய மணியிடைகன கங்கணியணி 3திரளின்
அனல்விரவிய வலரணியதொ ரசோகம்மது கண்டான்.
 

     (இ - ள்.) புனல் விரவிய துளிர்பிதிர்வது - நீர் இடையிலே பொருந்தப்பெற்ற
துளிர்கள் பரவப்பெற்றதும், புரிமுத்து அணி - வலம்புரியினின்று தோன்றிய
முத்துக்களினால் அழகுபடுத்தப் பெற்ற; மணல்மேல் - மணல்மீது; மினல்விரவிய
சுடர்பொன் ஒளிர் - மின்னுதல் அமைந்த ஒளிர்கின்ற பொன்னினாலியன்று விளங்குகின்ற;
மிளிர் வேதிகைமிகை - ஒளியையுடைய திண்ணையின் மேலிருப்பதும், ஒள்கனல் விரவிய
மணி இடை - ஒளிவிளங்குந் தீயின் தன்மை பொருந்திய மணியையிடை யிடையே
கொண்டுள்ள, கனகம் - பொன்போன்று, கணி அணிதிரளின் - வேங்கை மலரின் அழகிய
கூட்டத்தில்; அனல்விரவிய அலர் அணியது - அனலின் தன்மை பொருந்திய மலரின்
மிகுதியைக் கொண்டதுமான; ஓர் அசோகம் அது கண்டான் - ஓர் அசோகமரத்தை
மரீசியானவன் பார்த்தான். (எ - று.)

மருசி அசோக மரத்தைக் கண்டான் என்க. அந்த அசோக மரம் புனல்விரவிய தளிர்
பரவப் பெற்றுள்ளது; செம்மணியை இடையே கொண்ட பொன்போன்ற வேங்கை மலர்கள்
விளங்குமாறு அவ்வேங்கை மலரினிடையே உதிர்ந்த செந்நிற மலர்களைக்கொண்டது என்க.
பொன் வேதிகையைச் சுற்றி மணலிருத்தலை “புரிமுத்தணி மணல்மேல் சுடர்பொன்னொளிர்
மிளிர்வேதிகை“ என்று கூறப்பெற்றது. வேங்கைமலர் கனகத்தையும் அசோகமலர் செம்மணியையும் ஒத்திருக்கும் என்க.

( 9 )

மரீசி அசோகமரத்தின் நிழலையடைந்ததும், துருமகாந்தன்
கல்லிருக்கையைக் காட்ட மரீசி திகைத்தல்

440. அதனின்னிழ லவனடைதலு மதுகாவல னாவான்
பொதியின்னவிழ் மலர்சிதறுபு பொலிகென்4றுரை புகலா
 

(பாடம்) 1. மணலுடையது. 2. மிகை நிலையது. 3. திரளின. 4. றிவைபுகலா.