பக்கம் : 32
 

     என்ப; அசை. “கொடுங்கோற் கோவலர்“ என்றார் முல்லையினும். இது நெய்தலோடு
மருதத்திற்கும், முல்லையோடு குறிஞ்சிக்கும் மயக்கங்கூறியது. புலம் என்பது ஈண்டு
கழனியைக் குறிக்கு மாகலின் புலவர் என்பது உழவர்க்குக் காரணப்பெயர். கைவினைப்
புலவர்-வெளிப்படை. குரவை கைகோத்தாடுங் கூத்து; “குரவைக் கூத்தே கைகோத்தாடல்“
கலவர், புலவர், கோவலர் என்பன அந்தந்த நிலத்து ஆண் மக்களின்பெயர். அசுணமா
என்பது புள்ளின் இயல்பும் விலங்கின் இயல்பும்கொண்டது. பறந்து செல்லாது; அது
விரைந்து செலும் செலவு பறத்தலைப்போன்றிருக்கும். இஃது இனிய இசைகேட்பின் மகிழும்;
பறைஒலி முதலிய பேரொலியைக் கேட்பின் மிக வருந்தும். ‘பறைபட வாழா அசுணமா‘
என்றார் பிறரும்.

( 28 )

சுரமை நாட்டின் சிறப்பு

35. மாக்கொடி மாணையு மௌவற் பந்தரும்
கார்க்கொடி முல்லையுங் கலந்து மல்லிகைப்
பூக்கொடிப் பொதும்பரும் பொன்ன ஞாழலும்
தூக்கடி கமழ்ந்துதான் றுறக்க மொக்குமே.
 
     (இ - ள்.) மாக் கொடி மாணையும்-கருங்கொடியாகிய மாணைக் கொடியும்; மௌவல்
பந்தரும்-காட்டு மல்லிகைக் கொடியின் பந்தரும்; கார்க்கொடி முல்லையும்-கார்காலத்து
மலர்கின்ற முல்லைக்கொடிகளும்; மல்லிகைப் பூக்கொடி பொதும்பரும்-மல்லிகைப்
பூங்கொடிகளின் தொகுதியும்; பொன்ன ஞாழலும்-பொன்னிற மலர்களையுடைய புலிநகக்
கொன்றையும்; (ஆகிய இவற்றின் மலர்கள் ஒன்றாய்க் கலந்து) தூகடி-தூய நறுமணம்;
கமழ்ந்து-கமழப்பெற்று; துறக்கம் ஒக்கும்-அச்சுரமைநாடுதேவர் உலகை நிகர்க்கும். (எ - று.)
தான்; அசை. மா - கருமை. மாணை மாக்கொடி என்றவாறு. இது குறிஞ்சிக் கருப்பொருள்.
முல்லை - முல்லைக் கருப்பொருள். மல்லிகை - மருதம் என்க. ஞாழல்-நெய்தற்
கருப்பொருள். இதுவும் நானிலமயக்கம் கூறியவாறுணர்க.

( 26 )

முதலாவது நாட்டுச் சருக்கம் முற்றிற்று.