பக்கம் : 321
 

அங்கதநிமித்திகன் கூறியவைகளைக்
கூறத்தொடங்குதல்

444. என்னவிது வந்தவகை யென்னினிது கேண்மின்
நன்னகரி தற்கிறைவன் முன்னநனி நண்ணித்
1தன்னிகரி கந்தவ னங்கத னெனும்பேர்ப்
2பொன்னவிரு நூல்கெழுபு ரோகித னுரைத்தான்.
 

     (இ - ள்.) இது வந்தவகை என்ன என்னின் - இந்த நிலா நிழற்கல் தோன்றியவிதம்
எவ்வாறு என்று கேட்பின்; இது கேண்மின் - நான் உரைக்கும் இந்த மொழிகளைக்
கேட்பீராக; நல்நகர் இதற்கு இறைவன் முன்னம் - அழகிய நகரமாகிய இந்தப்
போதனமாபுரத்திற்கு அரசனாகிய பயாபதியினுடைய முன்னிலையிலே, தன்நிகர் இகந்தவன்
- தனக்கு ஒப்பானவர்களை நீங்கியவனும், அங்கதன் எனும் பேர் - அங்கதன் என்னும்
பெயரைக் கொண்டவனுமாகிய, பொன் அவிரும் நூல்கெழு - பொன்போல் விளங்குகின்ற
அரிய நூலறிவு மிக்குள்ள; புரோகிதன் நனிநண்ணி உரைத்தான் - புரோகிதனானவன் மிக
நெருங்கிக் கூறினான். (எ - று.)

பொன்அவிரும் நூல்கெழு; பொன்போல் விளங்குகின்ற பூணூல் பொருந்திய எனினுமாம்.
அங்கதன் உரைத்தசெய்தி மேலே கூறப்படும்

( 14 )

தூதன்வருவான் என்றுகூறியதைச் சொல்லுதல்

445. மின்னவிர் விளங்குசுடர் விஞ்சையுல காளும்
வின்னவி றடக்கைவிறல் வேலொருவன் வேண்டி
மன்னநின் மகற்கொரு மகட்கரும முன்னி
இன்னவ னினைப்பகலு வீண்டிழியு மென்றான்.
 

     (இ - ள்.) அந்தப் புரோகிதனானவன் பயாபதி மன்னனைப் பார்த்து) மன்ன -
அரசனே!, மின்அவிர் விளங்கு சுடர் - மின்னலைப்போல் இமைத்தலைச் செய்கின்ற
விளக்கம் பொருந்திய ஒளியானது அமைந்த, விஞ்சை உலகு ஆளும் - வித்தியாதர
உலகத்தை அரசாட்சி புரிகின்றவனும், வில்நவில் தடக்கை விறல் வேல் ஒருவன் -
விற்போரிற் பழகிய பெரிய


(பாடம்) 1. தன்னிக ரிகந்தோன் தயங்கத, தயங்கித. 2. பொன்னவிரு லாநூற் புரோகித.