பக்கம் : 328
 

     (இ - ள்.) துடித்த துவர் வாயொடு - துடிக்கின்ற பவளம் போன்ற செவ்விய
வாயினோடே, நகை - பற்களாகிய, முத்தம் - முத்துவரிசை, துளும்பும் - மிளிருகின்றவரும்,
பொடித்த வியர் நீரொடு - நாணத்தாலே முகிழ்த்த வியர்வை நீரோடே, பொலிந்த சுடர்
ஓலை - பொலிவுற்ற ஒளியுடைய பொன்னோலையை அணிந்தவரும், அடுத்த -
பொருந்திய, திலகத்தினொடு - பொட்டினோடே, அணிந்த - ஒப்பனை செய்யப்பட்ட,
அளகத்தார் - கூந்தலையுடையவருமாகிய மகளிர்கள், முகத்து - தம்முகத்தேயுள்ள, வடித்த
சிறுநோக்கொடு - தெளிவுற்ற சிறிய காமக் குறிப்புடைய நோக்கத்தாலே, தொழில் வகுத்தார்
- காமத் தொழிலை விளைப்பாராயினர், (எ - று.)
நோக்கொடு - என்பதன்கண் உள்ள ஒடுவுருபை ஆல் உருபு ஆக்குக. நோக்கம் -
கண்களவு கொள்ளும் சிறு நோக்கம் என்க. இச் சிறுநோக்கம் மேல் காமத்தொழில்
நிகழ்தற்குக் காரணமாகலின், நோக்கினாற் றொழில் வகுத்தார் என்க.

( 24 )

வண்டுகள் மயக்கம்

455. பூவிரிகு ழற்சிகைம ணிப்பறவை போகா
வாவிகொள கிற்புகையுள் விம்மியவ ரொண்கண்
காவியென வூதுவன கைத்தலம் விலங்க
மேவியிவை காந்தளென வீழமிக நொந்தார்.
 

      (இ - ள்.) பூவிரிகுழல் சிகை - பூக்கள் அணியப்பட்ட கூந்தலாகிய மயிர்
முடியினிடத்திலே பொருந்திய, மணிப்பறவை போகா - வண்டுகள் அதனைவிட்டு எழுந்து,
ஆவிகொள் அகிற்புகையுள் விம்மி - ஆவியின் தன்மையைக் கொண்ட அகிற்புகையினால்
மிகவும் வருந்தி, அவர் ஒண்கண் - அந்த மாதர்களின் ஒளிதங்கிய கண்கள், காவிஎன
ஊதுவன - கருங்குவளை மலர்கள் என்று நினைத்து அவைகளினிடத்திலே சென்று
ஊதுதலைச் செய்யும், கைத்தலம் விலங்க - அவ்வளவில் கைகள் அந்த வண்டுகளை
விரட்ட, மேவி இவை காந்தள் என வீழ - கண்களைவிட்டுப் புறப்பட்ட வண்டுகள்
கைகளைக் கண்டவுடன் இவைகள் காந்தள் மலர்கள் என்று எண்ணிக் கைகளிலே பாய,
மிகநொந்தார் - அந்த மங்கையர் மிகவும் வருந்தினார்கள், (எ - று.)

( 25 )