பக்கம் : 337
 

முன்னர்வந்த நான்கு மகளிர்கட்குமேல், மற்றும்பல மங்கையர் பல வரவேற்புப்
பொருள்களுடன் ஆங்குப் போந்தமை இச்செய்யுளிற் கூறப்பெறுகிறது. பிரப்பு என்பது
குறுணியளவான பொருளைக் கொள்ளும் ஏனம் என்பர். பெருங்கதை சிந்தாமணி முதலிய
நூல்களிலும் இவ்வாறே வழங்கப்பெறும்.

( 38 )

மகளிர் பலரின் வருகையைக்கண்ட மரீசி இது விண்ணுலகமே யென்று
வியத்தல்

469. தகளி வெஞ்சுட ரெனத்திகழ் மணிக்குழை தயங்க
மகளிர் மங்கல வுழைக்கலஞ் சுமந்தவர் பிறரோ
டுகளு மான்பிணை யனையவ ருழைச்செல 1வொளிர்தார்த்
துகளில் விஞ்சையன் றுணிந்தனன் றுறக்கமீ தெனவே.
 

     (இ - ள்.) மகளிர் - பணிப்பெண்கள். தகளிவெஞ்சுடர் எனத்திகழ் -
தகளியிலேற்றப்பெற்ற விளக்கின் வெவ்விய சுடரைப்போல விளங்குகின்ற, மணிக்குழை
தயங்க - அழகிய குண்டலமென்னும் காதணியானது விளங்க. மங்கல உழைக்கலம்
சுமந்தவர் - மங்கலம் பொருந்திய உழைக்கலப் பொருளைத் தாங்கி வந்தவராகிய, பிறரோடு
- பிறமகளிரோடுங்கூடி, உகளும் மான்பிணை அனையவர் - தாவுந் தன்மையுள்ள
பெண்மானையொத்தவராய், உழைச்செல - மரீசியின் பக்கத்திலே செல்ல, ஒளிர்தார் -
விளங்குகின்ற மாலையை அணிந்த, துகள் இல் விஞ்சையன் - குற்றமற்ற விஞ்சையர்
தூதுவனாகிய மரீசியானவன், துறக்கம் ஈது எனவே துணிந்தனன் - விண்ணுலகம் இஃது
என்றே முடிவு செய்தான். (எ - று.)

பல அழகிய மகளிர்களையும் அவர்களிடத்தில் இருந்த வழிபாட்டுப் பொருள்களையும்
கண்டமருசி, இது மண்ணுலகன்று விண்ணுலகே என்று பெருங்களிப்படைந்தான் என்க.
உழைக்கலம் - வீட்டில் வைத்துக்கொண்டு பழகுதற்குரிய பொன் வெள்ளி இவற்றால் ஆன
ஏனங்கள்.

( 39 )

மரீசிக்கு வேண்டுவன புரிதல்

470. துறக்கம் புக்கவர் பெறுவன விவையெனத் 2துணியா
வெறிக்கண் விம்மிய விரைவிரி தாரவ னிருப்பச்
 

(பாடம்) 1. ஒளித்தார். 2. நினையா.