(இ - ள்.) துறக்கம் புக்கவர் - விண்ணுலகத்தையடைந்தவர்கள், பெறுவன இவை எனத் துணியா - பெறுகின்ற இன்ப நலங்கள் இவைகளாம் என்று முடிவுசெய்து, வெறிக்கள் விம்மிய - வெறியை உண்டாக்கும் தேனானது மிகப்பெற்ற, விரை விரிதாரவன் இருப்ப - மணம் பரவுகிற மாலையை அணிந்த மரீசியானவன் மகிழ்வுடன் அமர்ந்திருக்க, சிறைக்கண் நோக்கமும் - சுருங்கிய பார்வையையும், சிறுநகைத் தொழில்களும் - புன்னகைச் செயல்களையும், சுருக்கி - குறைத்துக்கொண்டு, அறைக்கண் மாந்தனுக்கு - வெள்ளிமலை யுச்சியிலிருந்து வந்தவனாகிய மரீசிக்கு, அதிதி அம் தொழிலினில் அமைந்தார் - விருந்தினரைப் போற்றும் சிறந்த செயலில் ஈடுபட்டார்கள். (எ - று.) சிறைக்கண் நோக்கம் - நன்குகண்களைத் திறந்து பாராமல் சிறிதே பார்க்கும் பார்வை. ‘சிறக்கணித்தாள்போல நகும்‘ என்னும் இடத்தில், ‘சிறங்கணித்தாள்‘ என்று உரைகூறி, சிறங்கணித்தல் - சுருங்குதல் என்று விளக்கவுரையுங் கூறினார் பரிமேலழகர். மரீசி விஞ்சையனாதலானும், விஞ்சையர் எனப்படுவோர் மக்களினும் மாண்புடையார்களாதலானும மங்கையர் தமது சிறுகுறைச் செயல்களை அறவேயொழித்து அச்சமும் அன்புங்கொண்டு மரீசியைப் போற்றலாயினர் என்று கூறவேண்டி, ‘சிறைக்க ணோக்கமுஞ் சிறுநகைத் தொழில்களும்‘ என்றார்.
அறை - மலையுச்சி. மாந்தன் - மனிதன். மண்ணுலகத்தான் அல்லன் என்பார் அறைக்கண் மாந்தன் என்றார். எனவே விஞ்சையன் என்றாராயிற்று. ‘மாந்தர்‘ என்னும் பலர்பாற் சொல் மட்டுமே தமிழ் இலக்கியங்களிற் காணப்படும். அதன் ஒருமையாகிய மாந்தன் என்னுமிச் சொல் இச் செய்யுளில் மட்டுமே காணப்படுகின்றது. இவ்வினிய சொல்லை நம்மனோர் பயின்று பெருவழக்கிற்றாக ஆக்குதல் நன்று. |