பக்கம் : 357
 

மருசியானவன் விசயதிவிட்டர்களைப் பன்முறை கண்டும் மன நிறைவு கொள்ளாதவனாய்
உள்ளத்தை ஒருவழிப்படுத்தி அடிமுதல் முடிவரையிலும் மீண்டும் மீண்டும்
நோக்கியவண்ணமே யிருந்தனன் என்க. உடலிலக்கண நூன் முறைப்படி விசயதிவிட்டர்கள்
அமைந்து விளங்கும் சிறப்பு மருசிக்கு, மகிழ்ச்சியளித்த தாதலின் மேன்மேலும்
பார்க்கலாயினான்.

( 68 )

மரீசி விசயதிவிட்டர்களைப் பார்த்துப்
பேசத் தொடங்குதல்

499. வேரிமாலை விம்மவும்வி ளங்குபூண்டு ளும்பவுந்
தாரொடார மின்னவுந்த யங்குசோதி கண்கொள
1வாரநோக்க கில்லனன்ன னரசநம்பி மார்களைச்
சாரவாங்கொர் கற்றலத்தி ருந்துதான்வி ளம்பினான்.
 

     (இ - ள்.) வேரிமாலை விம்மவும் - தேன்பொருந்திய மலர் மாலை
பருத்துத்தோன்றவும், விளங்குபூண் துளும்பவும் - விளங்குகின்ற அணிகலன்கள் ஒளியை
வெளிப்பரப்பவும், தாரொடு ஆரம்மின்னவும் - பூமாலைகளுடனே முத்துமாலைகள்
விளங்கவும், தயங்குசோதி கண்கொள - விசயதிவிட்டர்களிடத்தில் விளங்குகின்ற ஒளி
கண்களைப் பறிக்கவும், ஆரநோக்க கில்லன் - பொருந்தப்பார்க்க முடியாதவனாகி,
அன்னன் - அத் தன்மையினையடைந்தவன். அரச நம்பிமார்களைச்சார - அரசனுடைய
சிறந்த மக்களாகிய விசயதிவிட்டர்களை நெருங்கி, ஓர் கல்தலத்து இருந்து விளம்பினான் -
ஒருகல்லின்மீது அமர்ந்து சொல்லலானான், (எ - று.)

விசயதிவிட்டர்களின் உடலொளி கண்களைப் பறித்தலால் விஞ்சையன் மனநிறைவு
உண்டாகுமளவும் பார்க்கமுடியாதவனாய் உரையாடத் தொடங்குகின்றனன் என்க.
 

( 69 )

விஞ்சையர் தூதுவன் விசயதிவிட்டரின்
மேம்பாட்டைக் கூறுதல்

500. செம்பொன்வான கட்டிழிந்து தெய்வயானை 2யுண்மறைஇ
வம்புநீர்வ ரைப்பகம்வ ணக்கவந்த மாண்புடை
நம்பிமீர்க ணுங்கள்பாத நண்ணிநின்3றி றைஞ்சுவார்
அம்பொன்மாலை மார்பினீர ருந்தவஞ்செய் தார்களே.
 

(பாடம்) 1. ஆரநோக்கு கல்லலனரசநம்பி. 2. உண் மறைத்து. 3. இறைஞ்சுவர்.