பக்கம் : 362
 

     (இ - ள்.)விரைகதிர் அலங்கல் செங்கேழ் - வாசனையையும் ஒளியையும் உடைய
மாலையணிந்த செந்நிறவொளி பொருந்தியவனும், விண் இயங்கு ஒருவனோடும் -
விண்ணில் போக்குவரவு செய்யுந் தன்மையுள்ள வனும் ஆகிய மருசியோடும், வரைக்கு
எதிர்ந்து இலங்கும் மார்பின் - மலையோடு மாறுபட்டு விளங்குகின்ற மார்பையுடைய
மன்னவன் குமரர் செல்வர் - பயாபதி மன்னனுடைய மக்களாகிய சீரியோர், எரிகதிர்
ஏற்றைக்காலம் - எரிக்குந் தன்மையுள்ள ஒளிக்கெல்லாம் தலைமையுடைய கதிரவனுக்கு
வேனிற்காலமும், எழுநிலா பருவம் - தோன்றுகின்ற நிலாவிற் குரிய காலமாகிய
கூதிர்க்காலமும், மேகம் நிரைத்தெழும் இருதும் - முகில்கள் கூட்டமாக எழுந்தன்மையுள்ள
கார்காலமும், அன்று - அப்பொழுது, நிரந்தது - ஒன்றுபட்டிருந்ததாகிய, ஓர்சவியர் ஆனார்
- ஒப்பற்ற ஒளியையுடையவர்களாகத் தோன்றினார்கள், (எ - று.)

மருசி செவ்வொளி பரந்த உடலையுடையவன்; விசயன் வெள்ளொளி விளங்கும்
யாக்கையினன். திவிட்டன் நீலநிறத்தன்; இம் மூவரும் ஒன்றுசேர்ந்திருந்தது
வேனிற்பருவமும் கூதிர்ப்பருவமும் கார்ப்பருவமும் ஒன்றுகூடிய தன்மையை ஒக்கும் என்று
வருணித்தார்.

எரிக்கதிர் - எரித்தலையுடைய கதிர். இரண்டாம் வேற்றுமையுருபும் பயனுந்தொக்க தொகை.
“ஆற்றலோடு புணர்ந்த வாண்பாற்கெல்லாம், ஏற்றைக் கிளவி யுரித்தெனமொழிப ' என்றார்
தொல்காப்பியனாராகலின், எரிகதிர் ஏற்றைக் காலம் என்பதற்கு எரிக்குந்தன்மையுள்ள‘
ஒளிக்கெல்லாம் தலைமையுடைய கதிரவனுக்குரிய வேனிற்காலம் என்று பொருள்
கூறப்பட்டது. “சிலவிகாரமாம் உயர்திணை ' என்னும் விதியால் குமரச் செல்வர்
என்றாகியது, குமரர் செல்வர் என்றும் பாடம்.

( 75 )

தெருவிற் செல்லுதல்

506. வார்கலந் திலங்கு கொம்மை வனமுலை மகளி ரிட்ட
ஏர்கலந் தெழுந்த 1தூம வியன்புகை கழுமி நான
நீர்கலந் துகுத்த மாலை நிறமதுத் திவலை சிந்தக்
கார்கலந் திருண்ட போலுங் கண்ணகன் தெருவுட் சென்றார்.
 

     (இ - ள்.) வார்கலந்து - கச்சானது சேர்ந்து, இலங்கு - விளங்குகின்ற, கொம்மை - பெருத்த, வனமுலை மகளிர் இட்ட - அழகிய


(பாடம்) 1. தூமச் செழும்புகை கழுமி.