பக்கம் : 371
 

ஒத்தாரோடு திருமணத்தொடர்பு கொள்வது உலக வழக்கம் வித்தியாதரர்களோ தேவர்களிற்
சேர்ந்தவர்கள். அவர்களிடம் இருந்து மனிதர்கள் பெண்கொள்வது தகுதியாகுமோ.
சுவலனசடி என்னும் விஞ்சையன் நம் மகனுக்குப் பெண் கொடுக்கிறேன் என்றால்
அவனுடைய கருத்து யாதோ என்னும் கலக்கம் பயாபதி மன்னனுக்கு உண்டானபடியால்
அவன் யாதும் பேசமுடியாமல் திகைத்திருந்தான். கொல் : அசை. ஓகாரம் ஐயப்பொருளது.

( 86 )

மருசி சினத்துடன் கூறத்தொடங்குதல்

517. தீட்டருந் திலதக் கண்ணிச் செறிகழ லரசர் கோமான்
மீட்டுரை கொடாது சால 1விம்மலோ டிருப்ப நோக்கி
வாட்டரும் பெருமை யெங்கோ னோலையை மதியா வாறென்
றோட்டருங் கதத்த 2னாகிக் 3கேசர னுரைக்க லுற்றான்.
 

     (இ - ள்.) தீட்ட அரும் - தீட்டுதற்கு அரிய, திலதம் கண்ணி - நெற்றிப்
பொட்டுப்போற் சிறந்த முடிமாலையையும், செறிகழல் - நெருங்கிய வீரக்கழலையுமுடைய,
அரசர்கோமான் - அரசர்கட்குத் தலைவனாகிய பயாபதி மன்னவன், மீட்டு உரை கொடாது
- பதில் உரை கூறாமல், விம்மலோடு இருப்ப நோக்கி - வியப்புடன் இருப்பதைப் பார்த்து,
வாட்ட அரும் பெருமை எம்கோன் - பிறராற் கெடுத்தற்கு அரிய பெருமையை உடைய
எம் அரசனாகிய சுவலனசடியின், ஓலையை மதியா ஆறு என்று - திருமுகத்தைப்
பெருமைப்படுத்தாத செய்கை இதுவாகும் என்று எண்ணி, ஓட்ட அரும் கதத்தன் ஆகி -
போக்குதற்கு அரிய சினத்தையுடையவனாகி, கேசரன் - மருசியானவன், உரைக்கலுற்றான் -
சொல்லலானான், (எ - று.)

பயாபதிமன்னன் திகைத்திருந்த நிலைமையை மருசியானவன் மாறுபாடாக எண்ணிவிட்டான்.
எம் அரசனாகிய சுவலனசடியின் திருமுகத்தை மதியாமல் ஆணவங்கொண்டுள்ளான் என்று
முடிவுசெய்த மருசி பெருஞ்சினத்துடன் பயாபதிமன்னனைப் பார்த்துப் பேசத்
தொடங்கினான் என்க. வாட்டரும் பெருமை என்பதை, வாள்தரும் பெருமை என்று பிரித்து
அதற்கேற்பப் பொருள் உரைப்பினும் அமையும்.

( 87 )

மருசி சினந்து கூறுவன

518. முன்னமோர் கருமம் வேண்டி மொழிபவேல் 4மனிதர் தம்மால்
என்னவ ரேனு மாக விகழ்ந்திடப் படுவ 5போலாம்
அன்னதே யுலக வார்த்தை யாவதின் றறியும் வண்ணம்
மின்னவின் றிலங்கும் வேலோய் நின்னுழை விளங்கிற் றன்றே.
 

(பாடம்) 1. விம்மமோடு. 2. ஆகக். 3. கோசரன் என்பன பாட பேதங்கள். 4. மனிசர். 5. பேரல்வாய் என்பன பாடபேதங்கள்.