வித்தியாதரர்கள் மனிதரினும் மேன்மையுடையவர்கள், தேவர்களைப் போலவே பெருமையுடையவர்கள். அவ்வாறானவர்களோடு மனிதர்கள் திருமணத் தொடர்புகொண்டு இன்பம் அடைய முடியாதென்று பயாபதி மன்னன் மருசியிடம் கூறுகிறான். விஞ்சையர்கள் தீப்போன்ற செந்நிறம் உடையவர்களாதலின் வெஞ்சுடர்த்தெறுதீ விச்சாதரர் என்றார். மஞ்சு என்பதனை முகில் என்று பொருள் கொண்டு, முகில் மழைபொழிதலை யுடைய நிலவுலகம் என்று பொருள் கூறினும் பொருந்தும். |
(இ - ள்.) ஈட்டிய - அடைந்துள்ள, ஊன்செய் யாக்கை - ஊனினால் இயன்ற உடலையுடைய, எம்முழை - எம்மிடத்து, இன்னவாறு - இப்படியாக, வாட்டம் இல் - வாடுதலில்லாது, வயங்கு கண்ணி - விளங்குகின்ற மாலையை அணிந்த, மணிமுடி மன்னன் ஓலை - மணிமுடியின் அணிந்த சுவலனசடி என்னும் வித்தியாதர மன்னனுடைய திருமுகத்தை, காட்டி நீ உரைத்த எல்லாம் - காணுமாறு செய்து நீ சொன்ன சொற்களையெல்லாம், கனவு எனக்கருதின் அல்லால் - கனவு என்று நினைத்தால் நினைக்கலாமே யல்லாமல், மீட்டு - மாறி, மெய்ம்மையாக - உண்மைச் செய்தியாக, வியந்து - கொண்டாடி, உரை விரிக்கலாமோ - பதிலுரையினை விவரித்துக் கூறவும் முடியுமோ? (எ - று.) நீ எம்மிடம் திருமுகத்தைக் காட்டியதையும், மேலும் சொன்ன சொற்களையும் நான் கனவு என்று எண்ணுகின்றேனே யல்லாமல், மெய்ம்மையில் நிகழ்ந்த செயல்களாகக்கொண்டு பதிலுரைக்க முடியவில்லை என்கிறான் பயாபதிமன்னன். வியக்கத்தக்கதும் மனதினால் எண்ணமுடியாதது மான செய்தியை முதலில் கேட்போர் அதனை உடனே நம்பாமல் ஐயுற்றுப் பிறகுதான் நம்புவர். |