களி - மதக்களிப்பையுடைய, நல்யானை பவனவேகற்கு - சிறந்த யானையையுடைய பவனவேகன் என்பவனுக்கு, தேவி - மனைவியாவாள், கண்நவில் - கண் இடைவிடாது பழகுதற்குக் காரணமான, வடிவின் - வடிவினையுடைய, காந்திமதி அவள் - காந்திமதி என்னும் பெயரினையுடையாள் அவளது, காதல்பாவை - அன்புடைய மகள், வண்ணம் வில்புருவம் - அழகிய வில்லைப்போன்ற புருவத்தையும், வாள்கண் - வாட்படையைப் போன்ற கண்களையுமுடைய, வாயுமா வேகை என்பாள் - வாயுவேகை என்னும் பெயரினையுடையவள், (எ - று.) பவபுரத்தரசன் பவனவேகன்; அவனுடைய மனைவி காந்திமதி என்பவளுடைய மகள், வாயுமா வேகை. மா இசை நிறைத்தற் பொருட்டு வந்த அசைச்சொல் : உலோகமா பாலன் என்னுமிடத்து வருவது போன்றது. பண்நவில் என்பதை யானைக்கு அடையாக்கி அழகு செய்யப்பெற்ற என்று பொருள்கொள்ளினும் பொருந்தும். |
(இ - ள்.) கருமணி கடகம் கையாய் - சிறந்த மணியைக் கொண்டு செய்த கடகத்தையணிந்த கைகளையுடையவனே! அவளோடும் வந்தேன்யான் - அக்காந்திமதியோடு பிறந்தேன் நான், மன்ன - அரசனே!, மருசி என்பேன் - மருசியென்னும் பெயரினையுடையேன், அற்றம்இல் கேள்வி - எந்தை குறைதலில்லாத நூற்கேள்வியையுடைய என்னுடைய தந்தை, அஞ்சுமான் என்னும் பேரான் - அஞ்சுமான் என்னும் பெயரினையுடையவன், பெற்றதாய் அருசிமாலை - எம்மைப் பெற்றதாய் அருசிமாலை யென்பவளாவாள், பெருமகள் அருளினால் - பெருமை பெற்ற அந்த என் தாயினாலே, யான் கற்ற நூல் பல்ல ஆகும் - யான் ஓதியுணர்ந்த நூல்கள் பலவாகும், (எ - று.) நான் காந்திமதியுடன் பிறந்தவன். என்னுடைய தந்தையின் பெயர் அஞ்சுமான். என் தாய்பெயர் அருசிமாலை. நான் அவள்பாற் கற்றுக்கொண்ட நூல்கள் பலவாகும் என்க. மருசியினுடைய தந்தையின் பெயர் அஞ்சுமான் : தாயின் பெயர் அருசிமாலை; உடன்பிறந்தாளுடைய பெயர் காந்திமதி. உடன் பிறந்தாட்கு வாயுவேகை மகளாவாள் என்றவாறு. பெருமகள் அருளினால் என்பதற்குக் கலைமகள் என்று பொருள் கூறினும் பொருந்தும். பல்ல : விரித்தல் விகாரம். |