பக்கம் : 391
 

     உண்மைத்தன்மையைப் பார்த்து, தூண்டிய சுடரின் நின்ற - தூண்டப்பட்ட ஒளியைப்
போல விளங்கிக்கொண்டிருந்த, தியானத்தைத் துளங்குவாய் போல் - தியானத்தை
அசைப்பிப்பாய்போல, இசை குறு ஏவல் - பாடலினாற் செய்யுஞ் சிறுதொண்டை, எம்இறை
அடிக்கண் - எம்முடைய இறைவனாகிய அருகக்கடவுளின் திருவடிகளிடத்தே, செய்தாய் -
இயற்றினாய், வேண்டுவது எவன் கொல் என்றான் - நீ விரும்புவது யாதோ என்று நமியை
வினாவினான், (எ - று.)

ஆதிசேடன் நமியரசனைப் பார்த்து, “நீ அருகக் கடவுளின் திருவடிகட்கு இசைத்தொண்டு
செய்தாய்; உனக்கு வேண்டிய சிறப்புக்கள் யாவை“ என்று உசாவினான். நமியரசன்
தியானத்தோடு மட்டும் அமைந்திராமல் இசைக்குற்றேவலையும் இயற்றியபடியால்
தியானத்தைத் துளங்குவாய் போல் என்கிறான், நமியரசன் வேண்டும் வரங்களைக்
கொடுத்தற்கு ஆதிசேடன் வந்தவனாகையால் ‘வேண்டுவது எவன்கொல்‘ என்றான்.
 

( 116 )

நமியரசன் விடையிறுத்தல்

547. பண்மிசைப் படர்ந்த சிந்தைப் பணதரற் பணிந்து மாற்றத்
1துண்மிசைத் தொடர்பு நோக்கி 2யுறுவலி யதனைக் 3கேளா
விண்மிசை யவர்கள் போல வேண்டிய விளைக்குஞ் செல்வ
மண்மிசைப் பெறுவ 4னாக மற்றிதென் மனத்த தென்றான்.
 

      (இ - ள்.) உறுவலி - மிகுந்த ஆற்றலமைந்த நமியரசன், அதனை கேளா - அந்த
ஆதிசேடன் சொன்னதைக் கேட்டு, மாற்றத்து - ஆதிசேட னுடைய மொழியினால்,
உள்மிசை தொடர்பு நோக்கி - அந்த ஆதிசேட னுடைய மனதிலே ஏற்பட்டிருக்கும்
பற்றுதலைப் பார்த்து, பண்மிசை படர்ந்த சிந்தை - இசையின்மீது சென்ற
கருத்தினையுடைய, பணதான் பணிந்து - ஆதிசேடனை வணங்கி, விண்மிசையவர்கள்போல
- தேவருலகத்தில் இருக்கின்ற தேவர்களைப்போல, வேண்டிய விளைக்கும் செல்வம் -
விரும்பியவற்றை உண்டாக்கவல்ல செல்வத்தை, மண்மிசை - இந்த நிலவுலகின்மேல்,
பெறுவன் ஆக - நான் பெறுபவன் ஆகுக, இது என் மனத்தது என்றான் - இதுவே
என்னுடைய உள்ளத்திலே இருக்கின்ற விருப்பமாகும் என்று நமியரசன் தெரிவித்தான்,
(எ - று.)

தான் விரும்பியதைத் தருதற்கு, ஆதிசேடன் விருப்பத்தோடு தன்னை வினாவுகின்றான்
என்றுணர்ந்த நமியரசன் ஆதிசேடனைப் பணிந்து,


(பாடம்) 1. உண்மிசைச் சுடர்ப. 2. உறுபலி. 3. கேட்டே. 4. னாயின்.