கிடந்தன, பொழில் அணிந்து எழுந்தவல்லி - பொழில்களை அழகு படுத்திக்கொண்டு எழுந்தன்மையையுடையவான கொடிகள், புதைந்தன - அவன் உடலிலே நெருங்கிப்படர்ந்தன, குழல் அணிந்து எழுந்த குஞ்சி - அவ்வரசனுடைய குழற்சியைப் பொருந்தி எழுந்த மயிர்தொகுதியை, குருவிக்கூட்டம் குடைந்தன - சிறு பறவைகளின் கூட்டம் தமது கூடாகக்கொண்டு குடையலாயின, (எ - று.) தவநிலையில் அமர்ந்துள்ள வாகுவலி மன்னனுடைய அடிகளிற் புற்றுண்டாகிப் பாம்புகள் சுற்றின. அவனுடைய உடல்மீது கொடிகள் படர்ந்தன. அவனுடைய தலைமயிரைக் குருவிக் கூட்டம் கூடாகக் கொள்ளலாயின. பூமிநாதன் என்னுஞ்சொல் மேலும்கீழும் சென்று பொருள் தருமாறு நடுநிலையாய் அமைந்துநின்றது. இதனை மத்திம தீபம் என்ப. |
(இ - ள்.) அருமுடி அரசர் தாழ்ந்த அடிமிசை - பெறற்கரிய முடிக்கலன் அணிந்த மன்னர் பலர் வணங்கப்பெற்ற தம் திருவடிகளின் மேலே, அரவம் ஊர - பாம்புகள் ஊர்ந்து செல்லவும், வடிகரு நெடுங்கண் நல்லார் - மாவடுவின் பிளவினை ஒத்த கரிய நெடிய கண்களையுடைய காதல் மகளிர்கள், கலந்த தோள் - பொருந்தித் தழுவிய தமது தோள்களை, வல்லிபுல்ல - காட்டுக்கொடிகள் படர்ந்து தழுவவும், மருஉடை உலகம் பாடல் - தம்பால் மருவுதலுடைய சான்றோர்கள் தம்மைப் பாராட்டிப் புகழ்ந்து பாடும் பாடலுக்கு மாறாக, வனத்திடைப் பறவை பாட - இப்பொழுது அக்காட்டிலுள்ள பறவைகள் சூழ்ந்து பாடவும், திருவுடையடிகள் - மேன்மையுடைய அவ்வாகுவலியடிகளார், நின்ற திறமிது - தவத்திலே நிலைத்து நின்ற பெருமையினை, தெரியலாமோ - எம்மனோர் அறிந்துரைக்க வியலுமோ (இயலாதென்றபடி), (எ - று.) வடி - மாம்பிஞ்சு. வல்லி - கொடிகள், மருவுடைய - தம்பால் மருவுதலுடைய. உலகம் - சான்றோர். பாடும் பாடல் என்க. அடிகள் : வாகுவலி. |