பக்கம் : 398
 

     (இ - ள்.) வண்டு அவாம் குவளைக்கண்ணி - முன்னர் வண்டுகள் விரும்புதற்குரிய
செங்கழுநீர் மலரானியன்ற முடிமாலையினை அணிந்த, மன்னர்தம் - அரசர்களுடைய,
மகுடகோடி - முடிகளிற் சூடப்பெற்ற, விண்டவாம் - வாய் நெகிழ்ந்தனவாகிய, பிணையல்
உக்க - மலர்மாலைகள் துளித்த, விரிமதுத் துவலை மாரி - மிக்க தேன்றுளியாகிய
மழையை, உண்ட வான் கழல்கள் சூழ்ந்த - பருகிய உயரிய வெற்றிக்கழல்கள் கட்டப்பட்ட,
திருவடி - சிறந்த அடிகளிலே, அரவம் ஊர - இப்பொழுது பாம்புகள் ஊர்ந்து நெளிய,
கண்டவாறு - தவத்திலே நிலைத்து நின்ற நிலையினை கண்டவர்கள் அறிவதனைப்
போன்று, இங்கணார்க்கும் - இவ்விடத்தேயுள்ள எத்தகைய அறிஞர்க்கும், கருதுவது அரிது
கண்டாய் - நெஞ்சாலே சிந்தித்து அறிதல் ஒண்ணாதாம், கண்டாய் : முன்னிலை அசை,
(எ - று.)

( 127 )

558. அடுக்கிய வனிச்சப் பூவி னமளிமே லரத்தச் செவ்வாய்
வடிக்கயல் நெடுங்க ணார்தம் வளைக்கையால் வளைத்த மார்பில்
தொடுக்கிய தொடுத்த போலுந் துறுமலர்க் கத்தி மாதர்
கொடிக்கையா லிடுக்க றன்மேல் கொற்றவன் குலவப்பட்டான்.
 

     (இ - ள்.) அடுக்கிய - ஒழுங்குற அடுக்கப்பட்ட, அனிச்சப்பூவின் அமளிமேல் -
மெல்லிய அனிச்சமலராலாய படுக்கையின் மேலே, அரத்தச் செவ்வாய் - குருதிபோலச்
சிவந்த வாயினையுடையவரும், வடிகயல் நெடுங்கணர்தம் - மாவடுப்பிளவினையும்
கயல்மீனையும் ஒத்த நெடிய கண்களையுடையவரும் ஆகிய மகளிருடைய, வளைக்கையால்
- வளையலணிந்த கைகளாலே, வளைத்த மார்பில் - தழிஇ வளைக்கப்பட்ட
மார்பினிடத்தே, தொடுக்கிய தொடுத்த போலும் - பூந்தொடையலாகத் தொடுக்கக் கருதிப்
பூமாலை தொடுப்போராற் றொடுக்கப்பட்ட மாலையைப் போன்று, துறுமலர்கத்திமாதர் -
செறிந்து நிரல்பட்ட மலரையுடைய குருக்கத்தி யாகிய மகளிர், கொடிக்கையால் -
அழகிய தமது கொடிகளாகிய கைகளாலே, இடுக்கல் - தழுவுதலை, கொற்றவன் -
வாகுவலிமன்னன், தன்மேல் குலவப் பட்டான் - தனது உடலின்மிசைப்
பொருந்தப்பெற்றான், (எ - று.)
கொற்றவன் : வாகுவலி.

( 128 )

559. புல்லிய பொலங்கொம் பொப்பார் புலவியுட் கலவி சென்று
மெல்லிய மாலை தம்மால் விசித்தலை விடுத்து மீட்டு
மல்லுய ரலர்ந்த மார்பின் மாதவிப் பேதை யார்த்த
வல்லிகள் விடுக்க மாட்டா மனத்தினன் மன்ன னானான்.