(இ - ள்.) புல்லிய பொலங்கொம்பு ஒப்பார் - தழுவிய பொன்கொடியை ஒத்த காதன் மகளிர்கள், புலவியுள் - ஊடலிடத்தே, கலவிசென்று - தம் மனத்தூடே ஊடல்தீர்ந்துகலந்து முயங்கும் கருத்துண்டாதலாலே, மெல்லிய மாலை தம்மால் - தமது மென்மைமிக்க மலர்மாலையாலே, விசித்தலை - தன்னை ஒறுப்பாராகக் கட்டுதலை. விடுத்தும் - தவிர்த்தும் மீட்டு - மீளவும், மல்லுயர் அலர்ந்த மார்பின் - தன் மற்போர்வல்ல அகன்ற மார்பினிடத்தே, மாதவிப்பேதை - மாதவி என்னும் மகளால், ஆர்த்த - கட்டப்பட்ட, வல்லிகள் - கொடிகளின் கட்டுக்களை, விடுக்கமாட்டா - தவிர்க்க விரும்பாத, மனத்தினன் ஆனான் - மனத்தை உடையவன் ஆயினான், மன்னன் - அவ்வாகுவலி வேந்தன், (எ - று.) மாதவி - குருக்கத்தி. குருக்கத்திக் கொடிகள் தன்மேலே படர்ந்து பின்னவும் அவற்றை அகற்றாதவனாய், அடக்கிய மனத்தை யுடையான் ஆயினன் என்க. |
(இ - ள்.) ஓவல்இல் குணங்கள் என்னும் - நீங்குதல் இல்லாத குணங்கள் என்கின்ற, ஒளி மணிக்கலங்கள் தாங்கி - விளங்குகின்ற மணியணி களைப்பூண்டு, தேவர்கள் உலகம் எல்லாம் - தேவலோகமெல்லாம், செழு மணம் அயர்ந்து - மிகுந்த மணம் பொருந்தி, கூட்ட - வீச, கேவலப் பெண் என்பாள் ஓர் கிளர் ஒளி மடந்தை தன்னை - கேவலப் பெண் என்று பெயர் பூண்ட ஒப்பற்ற விளங்குகின்ற ஒளியையுடைய மடந்தையை, ஆவியுள் அடக்கி - தனக்குள்ளே ஒரு பகுதியாகக்கொண்டு, பின்னை - பிறகு, அமரர்க்கும் அரியன் ஆனான் - தேவர்கட்கும் அரியவன் ஆனான், (எ- று.) வாகுவலிமன்னன் உயரிய பண்புகளை மேற்கொண்டு தேவர்களினும் சீர்த்திபெற்ற நிலைமையை எய்தினான். கேவலப்பெண் - கேவல ஞானமாகிய பெண். “கேவலமடந்தை“ என்றார் சீவகசிந்தாமணியாரும். கேவலம் - வீடுபேற்றுநிலையாகிய முடிவுநிலை. மேலும் “முடிவென்னும் பெண்ணரசி தன்னை“ என்றும், “முடிவென்னும் பூங்கொடியும்“ என்றும் கூறுவார். |