பக்கம் : 4
 
     நெடியான் என்றது - இசையாலே நீண்டவன் என்பது படநின்றது. மேலும் திவிட்டன்
திருமாலின் கூறுடையோன் என்பதனையும் உணர்த்திநிற்றல் உணர்க. நெடியான் சரிதம்
என்றது, இது செப்பற்கரியது என்பது படநின்றது. எனவே, இதனை யான் ஆசைபற்றி
அறையலுற்றேன் என்பார் இது செப்பலுற்றேன் என்று எடுத்தோதினர்.

இனி - வெங்கண் வினை போழ்ந்து இருவ, சரண் சென்றநாள் என்று
கண்ணழித்துரைப்பினும் அமையும்: இருவ - இருத்த, என்க. சரண் - சரணம்; அஃதாவது
சமவசரண் என்பாருமுளர்.

 (2)

அவை யடக்கம்
3. கொற்றங்கொ ணேமி நெடுமால்குணங் கூற விப்பால்
உற்றிங்கொர் காதல் கிளரத்தமிழ் நூற்க லுற்றேன்
மற்றிங்கொர் குற்றம் வருமாயினும் 1நங்கள் போல்வார்
அற்றங்கள் காப்பா ரறிவிற்பெரி யார்க ளன்றே.
 
     (இ - ள்.) கொற்றம்கொள் நேமி நெடுமால் - வெற்றியே கொள்ளும் இயல்புடைய
சக்கரப்படை (முதலிய ஐம்படைகளையும்) ஏந்திய திருமாலாகிய திவிட்டனுடைய, குணம் -
பண்பினை; இப்பால் கூற - இத்தமிழகத்தின்கண் கூறுதற்கு, இங்கு ஓர் காதல் உற்றுக்கிளர
- என்னெஞ்சத்தின்கண் ஓர் அவாத்தோன்றி மிக்கு ஊக்குதலானே, தமிழ் நூற்கலுற்றேன் -
யான் இத்தமிழ்க் காவியமாகிய பெருநூலைச் செய்யத் துணிந்தேன்; இங்கு ஓர் குற்றம்
வருமாயினும் - இதன் கண் குற்றம் வருதல் இயல்பே, அங்ஙனம் குற்றம் உண்டாயினும்;
அறிவிற்பெரியார் - பேரறிவினையுடைய சான்றோர், நங்கள் போல்வார் அற்றங்கள்
காப்பார் - எம்மனோராகிய சிறியோர் செய்த பிழைகளைப் பொறுத்தருளும் இயல்புடையர்
அல்லரோ?

     ஆசை வெட்கமறியாது என்னும் பழமொழிக் கேற்ப இச்செயற்குரிய
ஆற்றலில்லாதிருந்தும் இதனைச் செய்யத்துணிந்தேன். ஆயினும் சிறியோர் செய்த
பிழையைச் சான்றோர் பொறுத்தருளும் இயல்புடையர் ஆவர் என்பது எனக்கு ஆறுதல்
அளிக்கின்றது என்பதாம்.

     மேலோருடைய பண்புகளை உணர்தலும் பேசுதலும் எல்லோர்க்கும் நலந்தரும் ஒரு
தலையாதலின் திருமாலின் அம்சமான நம்பியின் குணத்தைக்


     (பாடம்) 1. நுங்கள் போல்வார்.