பக்கம் : 401
 

     (இ - ள்.) குடித்தொடர் இரண்டும் கேட்டு - சுவலனசடி பயாபதி என்னும்
இருதிறத்தவரின் வழிமுறைச் செய்தியையும் கேட்டு, இருந்த வேந்தர் - அங்குக் கூடியிருந்த
அரசர்கள், குறுமயிர் எறிந்து - மயிர்க்கூச்செறிந்து, கண்ணுள் - கண்ணினுள்ளே, பொடித்த
நீர்த்திவலை சிந்தப்புகழ்ந்தனர் - திவலை திவலையாகத் தோன்றிய நீர்த்துளி கீழேவிழ
இருமரபையும் புகழ்ந்து பேசினார்கள், அடுத்து எரி அலர்ந்த செம்பொன் - உடனே
நெருப்பிற்காய்ச்சி யுருக்கிய மாற்றுயர்ந்த பொன்னாலியன்ற, அணிமணி முடியினான் -
அழகிய மணிகள் அழுத்திய முடியினையுடைய பயாபதி மன்னன், அங்கு - அப்போது,
எடுத்து உரைகொடாத முன்னம் - மேற்கொண்டு செய்தியை எடுத்துப் பேசத்தொடங்
குவதற்கு முன்பு, கேசரன் இதனைச்சொன்னான் - மருசியானவன் மேற்செய்யுளில் வருஞ்செய்தியைச் சொல்லலானான். (எ - று.)

  சுவலனசடி பயாபதி ஆகிய இருமன்னர்களின் வழிமுறை வரலாறுகளையுங் கேட்டு
அங்கிருந்த மன்னர்கள் இன்பக்கண்ணீர் சொரிந்தனர். பயாபதி மன்னன் பேசத் தொடங்குவதற்கு முன்பு மருசி மேலும் பேசலானான்.

( 132 )

வாகுவலி கச்சனுக்கு மருகன் என்று கூறுதல்

563. இப்படித் தாயிற் பண்டை யிசைந்தது சுற்ற மென்னை
அப்படி யரிய செய்த வடிகளெம் 1மரச னாய
கைப்புடை யிலங்கு செவ்வேற் கச்சற்கு மருக னாரென்
றொப்புடைப் புராண நன்னூ 2லுரைப்பதியா னறிவ னென்றான்.
 

     (இ - ள்.) இப்படித்து ஆயின் - குலவரலாறு இவ்வாறாக இருக்கு மானால், சுற்றம் -
இருகுலத்துக்கும் உறவு முறைத்தன்மை, பண்டை இசைந்தது - முன்னரே அமைந்து
நின்றது, என்னை - அஃதெவ்வாறெனின், அப்படி அரிய செய்த அடிகள் - அவ்வாறு
அருமையான தவத்தைச் செய்த பெரியோன், எம் அரசன் ஆய - எம்முடைய அரசனான,
கைபுடை இலங்கு செவ்வேல் - கையினிடத்து விளங்குகிற செவ்விய வேலையுடைய,
கச்சற்கு - கச்சனென்பானுக்கு, மருகனார் என்று - உடன் பிறந்தாள் மகன் என்று, ஒப்பு
உடை - செய்திகளை ஒப்பச் சொல்லுதலையுடைய, புராண நன்னூல் உரைப்பது - சிறந்த
புராண நூலிற் சொல்வதை, யான் அறிவன் என்றான் - நான் உணர்வேன் என்று
சொன்னான், (எ - று.)

கச்சன் என்று கழறப்பெற்றவனுக்கு, வாகுவலி என்பானை மருகன் என்று எம்முடைய
புராண நூலில் கூறியிருத்தலால் இருகுலத்தார்க்கும் உறவுமுறை முன்னரே அமைந்து
கிடந்தது என்று மருசி குறிப்பிட்டான். அத்தைமகனை மருகன் என்றலும் உண்டு. பண்டை
- ஐயீற்றுடைக் குற்றுகரம்.

( 133 )


(பாடம் 1 1. மரைசன். 2. லுரைப்பக் கேட்டறிவன்.