பக்கம் : 417
 

பேசாமல் இருந்த மன்னனுக்குத் தான் கூறிய மாற்றமும், அதற்கு அவன் வருந்தி
மறுத்துரைத்ததும், பின்னர் இரு பெருங்குலத்திற்கும் பண்டு தொடர்புண்மை காணப்பட்டு
மகிழ்ந்ததும், (கூறினான் என்க.)

( 17 )

 

590.

பின்னை மன்னவன் பேணி நன்மொழி
சொன்ன வண்ணமுஞ் சுற்ற மாயதும்
பொன்ன கைக்குலம் பொலிந்து கண்கொள
வின்ன கைச்சிறப் பருளி யீந்ததும்
 

     (இ - ள்.) பின்னை - அதன் பிறகு, மன்னவன் - அரசன், பேணி - பரிசில்
முதலியவற்றால் தன்னை மகிழ்வித்து, நன்மொழி - நன்மைகெழீஇய இனிய மொழிகளை,
சொன்ன வண்ணமும் - சொல்லிய தன்மையும், சுற்றம் ஆயதும் - உளத்தால் பொருந்திய
உறவினன் ஆகியதும், பொன்நகைக் குலம் - அழகிய அணிகள், பொலிந்த கண்கொள -
பொலிவுற்று விளங்குதலாலே தன் கண்களைக் கவர்ந்து கொள்ளும்படி, இன்னகைச் சிறப்பு
அருளி - இனிய முறுவலாகிய சிறந்த பொருளை வழங்கி, ஈந்ததும் - மேலும் பல
பெருமைகளை வழங்கியதும், (எ - று.)

     உபசரிப்பவர் முகமலர்ந்து முறுவல்பூத்து உபசரியாத வழி ஏனைய உபசாரங்கள்
பயனற்றன வாதலும், பிறவாற்றான் உபசரிக்க வியலாத வழியும், இன்னகை ஒன்றே
விருந்தினரை நன்கு மகிழச்செய்யும் பெருமை யுடைத்தாதலாலும், இன்னகையைச்
சிறப்பென்றான்.மன்னவன் நன்மொழியாற் றன்னைப் பேணிச் சுற்றமாயதும் இன்னகைச்
சிறப்பருளி ஈந்ததும் (கூறினான் என்க.)
 

( 18 )

 
591.

அருங்க லக்குழாத் தரசன் றேவிமார்
பெருங்கு லத்தவர் பெயர்ந்து கண்டது
மொருங்கு 1மற்றுளோ 2ருரைத்த 3வார்த்தையுஞ்
சுருங்கில் கேள்வியான் றொழுது சொல்லினான்.
 
 

      (இ - ள்.) அருங்கலம் - அரிய அணிகலன்களையுடைய, குழாத்து -
கூட்டமாகவுள்ள, அரசன் தேவிமார் - பயாபதி மன்னனுடைய மனைவியரும்,
பெருங்குலத்தவர் - உயர்குடிப் பிறப்பினருமாகிய மகளிர்கள், பெயர்ந்து - மீண்டும்,
கண்டதும் - தன்னைப் பார்த்ததும், மற்றுஉளோர் - வேறாகவுள்ள வர்களும், ஒருங்கு -
ஒன்றுகூடி, உரைத்த வார்த்தையும் - முகமனாகக் கூறிய இன் சொற்களும் ஆகிய
எல்லாவற்றையும், சுருங்கில் கேள்வியான் - குறைவற்ற கேள்விச் செல்வத்தையுடைய மரீசி
என்னும் சிறந்த தூதன், தொழுது சொல்லினான் - சடிவேந்தனை வணங்கிச் சொன்னான், (எ - று.)

 

     (பாடம்) 1. ஒருங்குழற்று மங்குள்ள. 2. முற்று மங்குள்ள வார்த்தைகள். 3. மற்று மங்குள்ள.