(இ - ள்.) அடிகள்! - அடிகளே!. சொன்ன வார்த்தை இஃது - யான் இதுகாறும் கூறிய சொல்லாகிய இது, இருக்க - அமைவதாக, இன்னம் - மேலும், சொல்லுவது - சொல்ல வேண்டியது, ஒன்றுள - ஒரு செய்தி உள்ளது (அஃதியாதெனின்), யான் - நான், பல மன்னர் தங்களை - உலகிலுள்ள பல வேந்தர்களை, மகிழ்ந்து கண்டனன் - மகிழ்ச்சியோடு கண்டின்புற்றுள்ளேன், அரசர் - சிறந்த அவ்வரசர் பலருள்ளும், அன்ன நீர்மையார் இல்லையே - அப் பயாபதி வேந்தன் துணை உயர்ந்த பண்புடைய வேந்தர் ஒருவரையேனும் யான் கண்டதில்லை (என்பதே), (எ-று.) வார்த்தை : சாதி ஒருமை. ஒன்றுள, பான்மயக்கம், துவ்வீறு தொக்கதுமாம். யான் மகிழ்ந்து கண்டனன் என்றான், சிறந்த அரசர்களையே யான் கண்டேன் என்பதை உணர்த்த. இதன்கண் போதன நகரத்தரசன் பண்புபற்றி மரீசி தன் கருத்தைத் தெரிவிக்கின்றான் ஆதலின் இதனைச் சிறப்பாக விதந்து வேறாக ஓதினான் என்க. |