(இ - ள்.) நீர் எல்லை உலகு - கடலை எல்லையாகவுடைய இவ்வுலகம், இனிது கண்பட - இன்புற்று உறங்கிக்கிடக்கும்படி, விளங்கும் - திகழ்கின்ற, வெல்லும் வேலவன் தண் அளி - பகைவரை வென்று மேம்படும் வேலேந்திய பயாபதி மன்னனுடைய குளிர்ந்த அருளுடைமை, இல்லையேல் - இல்லையாய் ஒழியின், உலகு இல்லை - இவ்வுலகியல் நன்கு நிகழ்தலும் இல்லையாய் ஒழியும், என - என்று அறிஞர் உரைக்கும்படி; அவன் நல்லனே - அப் பயாபதி மன்னன் நன்மையுடையவன் ஆவன், நாமவேலினாய்- பகைவர்க்கு அச்சம் நல்கும் வேலேந்திய வேந்தே! (எ - று.) “பண்புடையார்ப் பட்டுண் டுலக மதுவின்றேன் மண்புக்கு மாய்வது மன்“ என்னும் திருக்குறளை ஒப்பு நோக்குக. “உண்டா லம்ம இவ்வுலகம்.... .........உண்மை யானே“ என்னும் புறப்பாட்டின் கருத்துடையது இச்செய்யுள் என்க. |
(இ - ள்.) சுடரும் வேலினாய்! - ஒளிதரும் வேற்படை வேந்தே!. கொற்ற வேலவன் குடையின் நீழலார் - வெற்றி வேலேந்தும் போதன மன்னனுடைய குடையின் நீழலில் வாழும் மாந்தர் எல்லாம் கற்றநூலினர் - ஓதிய நூலறிவு மிக்கவர், உற்றபோழ்து - தம் வேந்தர்க்கு இடுக்கண் வந்துற்ற பொழுது, உயிர் கொடுக்கும் ஆற்றலால் - தம்முயிரையும் கொடுத்து அவ் விடுக்கணகற்ற முனையும் பேராற்றல் உண்மையானும்; கலந்த காதலால் - வேந்தன்பால் அகமும் புறமும் ஒன்றுபட்ட மெய்யன்புடைமையாலும், சுற்றமாண்பினர் - அரசனது மெய்மைச் சுற்றத்தார் போன்ற மாட்சிமையுடை யவர் ஆவர், (எ - று.) பயாபதி வேந்தன் குடைநிழல் வாழ்வார் எல்லாம் அவன்பால் மெய்யன்புடையரும், அரசனுக்கு இடுக்கண் வராதபடி தம்முயிரையும் கொடுத்துப் பாதுகாப்பவரும் ஆகலின் அரசனுடைய சுற்றத்தார் போல்வார் என்பதாம். |