(இ - ள்.) மங்குல் மாமழை மாரி - விசும்பிற்றோன்றும் கரியமுகில் பெய்யும் மழையை ஒத்த, வண்கையான் - வள்ளன்மை மிக்க கைகளை யுடைய பயாபதியின், பொங்கு காதலம் புதல்வர் தாமும் - மிக்க அன்பிற் குரிய அழகிய புதல்வர்களோ எனில். மற்று இங்கண் வேந்தர்க்கு - இவண் உள்ள பகை அரசர்களுக்கு, மான்கள் முன் - மான் கூட்டத்திற்கு முன்னர் எய்திய, ஏனை சிங்க ஏறு என - அவற்றின் வேறாகிய அரியேறுகளை ஒப்பாவர் என்று, செப்பும் நீரர்-சொல்லத்தக்க தன்மையினர் ஆவர், (எ - று.) இதுகாறும் பயாபதி வேந்தன் பண்பைப் பாராட்டிய மரீசி இனி மக்கள் மாண்பினை விரிக்கின்றான். தந்தையறிவே மகன் அறிவு என்பவாகலின் தந்தையின் பின்னர் மக்களைக் கூறுதல் முறையே என்க. விசயதிவிட்டர்கள், மற்றைய மன்னராகிய மான் கூட்டத்திற்குச் சிங்கவேறென, அவர் ஆண்மையையே முன்னர்ப் பாராட்டினன், அரசர்க்குச் சிறந்துரிமை யுடையது தோளாற்றலே ஆகலான் என்க. |
(இ - ள்.) வையம் ஆள்பவன் புதல்வர் - உலகத்தை ஆட்சி செய்கின்ற பயாபதி மன்னனுடைய மைந்தர்களாகிய, வார்கழல் ஐயன்மார்கள் தம் - நீண்ட வீரக்கழலணிந்த விசயதிவிட்டர்களுடைய, அழகின் வண்ணம் - அழகினது தன்மை, (எத்தகையதெனில்?) கை அவாசிலை காமன் - கையின் கண் அவாவுதற்குக் காரணமான கரும்பு வில்லையுடைய மன்மதன், இங்கு இரு மெய்யினால் - இம்மண்ணுலகத்தே (விசய திவிட்டருடைய) இரண்டுடம் புகளின் வாயிலாய், வெளிப்பட்ட நீரது - உலகோர் கண்காணத் தோன்றிய தொரு நீர்மையை உடைத்து, (எ - று.) அழகின் வண்ணம் காமன் வெளிப்பட்ட நீரது என்க. உருவமில்லாத காமவேள் இரண்டு வேறு உடல்களிலே வெளிப்பட்டுத் தோன்றினாற் போன்ற அழகுடையர் விசயதிவிட்டர்கள் என்றான் என்க. |