(இ - ள்.) மன்ன - அரசே!, சங்கவண்ணனார் - சங்கைப் போல வெள்ளைநிறம் பொருந்திய விசயனுடைய, தம்பிதானும் - தம்பியாகிய, நீர் பொங்கு கார்முகில் புரையும் மேனியன் - நீர்மிக்க கரியமேகத்தின் நிறத்தை ஒத்த நிறமுடைய திவிட்டன் என்பான், அங்கண் இவ்வுலகு ஆள - அழகிய இடமமைந்த இந்த உலக முழுதையும் ஆளும் அரசர்கள் நெறியறிந்து ஆளுதற்கு, நாட்டிய - இறைவனால் நிலைநிறுத்தி வைக்கப்பட்ட, மங்கலப்பொறி - நன்மை மிக்க ஓர் அடையாளம் ஆவன், காண்டியால் - என்று அறிவாயாக, (எ - று.) ஏனைய மன்னர்கள் இவனைப் போன்று ஆள்க என்பதற்கு அடையாளமாகத் திவிட்டனை இறைவன் படைத்து நாட்டினன் என்க. இனி மேனியன் இவ்வுலகு ஆள்வதள்கு அறிகுறியாக இறைவன் அவன் மேனியில் நாட்டியுள்ள உத்தம விலக்கணங்களையும் நோக்குக! என்று இயம்பினும் அமையும். |
(இ - ள்.) நங்குலக்கொடி நங்கை - நம்முடைய குலத்தின் கட்டோன்றிய பூங்கொடி போல்வாளாகிய சுயம்பிரபை, செங்கண் மாலவன் தெய்வ மார்பகம் - சிவந்த கண்களையுடைய திருமாலாகிய திவிட்டனுடைய தெய்வத்தன்மை பொருந்திய மார்பினிடத்தே, பங்கயத்துமேல் பாவை தன்னுடன் - செந்தாமரை மலரின்மேல் வதியும் திருமகளோடு (முன்னரே சேர்ந்துளாளாகலின்), சேர்வதற்கு - சேர்ந்துவதிவதற்கு, இங்கன் - இவ்வுலகத்தே, எவன்கொல் மாதவம் செய்ததே - எத்தகைய பெருந்தவம் நோற்றனளோ! (எ - று.) பெறற் கரிய பேறு தவத்தானன்றிப் பெறலாகா தாகலின் செங்கண் மாலாகிய திவிட்டற்குத் தேவியாக நம் சுயம்பிரபை நல்லான் மிகப் பெரிய தவம் நோற்றாளாதல் வேண்டும் என்றான். உரிமைபற்றி நங்குலக்கொடி என்றான் என்க. |