பக்கம் : 432
 

     (இ - ள்.) மண்கனிந்த முழவின் - மார்ச்சனையமைந்த மத்தள இசையுடனே நிகழும்,
மடந்தையர் கண்கனிந்திடும் நாடகக் காட்சியும் - ஆடன்மகளிர் கண்களில் மெய்ப்பாடாக
வெளிப்பட்டுத் தோன்றும் கூத்தாகிய காட்சியின்பத்தையும், பண்கனிந்த இன்தீங்குரல்
பாடலும் - பாடன் மகளிருடைய பண்முற்றுப் பெற்ற இனிய மிடற்றுப்பாடலின்பத்தையும்,
விண்கனிந்திடவே விழைவெய்தினான் - தேவர்களும் உளம் நெகிழும்படி விரும்பி
நுகர்வானாயினன், (எ - று.)

     காண்போர் கண்ணைக் கனிவிக்கும் நாடகமுமாம். விண் - தேவர்: ஆகுபெயர்.
இவ்வின்பங்கள் தேவர்களையும் உருக்குதலால், விண்கனிந்திட என்றார். இதன்கண்
மகளிரின்பாற்பெறும் காட்சி இன்பமும் செவியின்பமும் கூறப்பட்டன.
 

( 45 )

 

618.

வாவி யும்மது மண்டபச் சோலையுந்
தூவி மஞ்ஞை துதைந்தசெய் குன்றமும்
பாவும் வெண்மண லும்புனற் பட்டமு
மேவு நீர்மைய னாய்விளை யாடினான்.
 

     (இ - ள்.) வாவியும் - (அச்சுவகண்டன் அம்மகளிர் குழாத்துடனே) தடாகங்களினும்,
மண்டபம் மதுச்சோலையும் - ஊடே மண்டபங்கள் அமைந்த தேன்துளிக்கும்
பூம்பொழிலிடங்களினும், தூவிமஞ்ஞை துதைந்த செய்குன்றமும் - தோகையான்
அழகெய்திய மயில்கள் நெருங்கிய செய்குன்றங்களினும், பாவும் வெண்மணலும் -
பரப்பப்பட்ட வெளிய மணலிடங்களினும், புனல்பட்டமும் - நீர்மிக்க ஓடைமருங்குகளினும்,
மேவும் நீர்மையனாய் - எய்தும் தன்மையுடையவனாய், விளையாடினான் -
விளையாட்டயர்ந்தான், (எ - று.)

     அச்சுவகண்டன் வாவிகளினும் சோலைகளினும் செய்குன்றங்களினும் மணற்
பரப்புகளினும் புனற்பட்டங்களினும் அம்மகளிருடனே மேவிக் காமக் களியாட்டயர்ந்தான
என்க. இங்குக் கூறப்பட்ட இடங்கள் காமவின்பத்திற்குச் சிறந்த இடங்களாம்.
 

( 46 )

 
619.

மின்னுஞ் செங்கதிர் மண்டிலம் 1வெய்தொளி
துன்னுந் திங்கட் பனிச்சுடர் தண்ணிது
என்னு மித்துணை யும்மறி யான்களித்
தன்ன னாயின னச்சுவ கண்டனே.  

     

 

     (பாடம்) 1. வேய்ந்தொளி.