பக்கம் : 442
 
 
 

பேசின் மானிடப் பேதைக ளாற்றலா
லாசி றோளிவை தாமசை வெய்துமோ.
 

     (இ - ள்.) மாசில் ஆலவட்டத்து எழும் மாருதம் வீச - அழுக்கில்லாத விசிறியால்
எழுப்பப்பட்ட காற்று வீசுதலாலே. விண்தொடு மேரு துளங்குமோ! - விசும்பைத்
தொடுகின்ற மேருமலை அசையுமோ!, பேசின் மானிடப்பேதைகள் ஆற்றலால் - ஆராய்ந்து
கூறுங்கால், மனிதர்களாகிய அறிவிலிகளின் வலியால், ஆசில்தோள் இவைதாம் அசையுமோ
- குற்றமற்ற என் தோள்களாகிய இவை அசைந்து விடுமோ!, (எ - று.)
விசிறியா லெழுப்பப்படும் காற்றுத் திண்ணிய மேருவினை என்செய்யும் என்றான் என்க.
இதனால் தன் பெருமைக்கும் அவர் சிறுமைக்கும் உவமை கூறினான்.
 

( 63 )

இதுவுமது
636.

வேழத் தின்மருப் புத்தடம் 1வீறுவ
வாழைத் தண்டினு ளூன்ற மழுங்குமோ
வாழித் தானவர் தானையை யட்டவென்
பாழித் தோள்மனித் தர்க்குப் 2பணியுமோ.
 

      (இ - ள்.) தடம்வீறுவ வேழத்தின் மருப்பு - பெருமையாற் சிறப்புற்றன வாகிய
யானையின் கொம்புகள், வாழைத்தண்டினுள் ஊன்ற மழுங்குமோ - வாழையினது நொய்ய
தண்டின் கண் குத்துதலாலே கூர்மழுங்கிவிடுமோ!, ஆழித்தானவர் தானையை அட்டஎன்
பாழித்தோள் - கடல்போலத் திரண்டு வந்த வித்தியாதரர்களின் படைகளைக் கொன்று
குவித்து நூழிலாட்டிய என் விரிந்த தோள்கள், மனித்தர்க்குப் பணியுமோ - எளிய
மானிடர்க்கோ தாழ்வன! (எ - று.)

     யானையின் மருப்பு மெல்லிய வாழைத்தண்டில் ஊன்றுதலாலே மழுங்க
மாட்டாததுபோன்று அப்பேதை மானிடரை வெல்வதனால் என் தோள்கட்கு
ஒருதாழ்வுண்டாகாதென்றான் என்க.

( 64 )

இதுவுமது

637.

3வேக மாருதம் வீசவிண் பாற்சிறு
மேக சாலம் விரிந்தெதிர் செல்லுமோ
வேக மாயவென் 4சீற்றமஞ் சாதெதி
ராக 5மானுடர் தாமசை கிற்பவோ.
 


     (பாடம்) 1. குத்துவ. 2. பனிக்குமோ. 3. 636-637-ம் ஆகிய இவ்விரண்டு செய்யுளும் சில பிரதிகளில் முன்பின் மாறியுள்ளன 4. றிறமஞ். 5. மானுயர்.