பக்கம் : 447
 

     நீண்டதற்பின் - அம்முண்மரம் நீண்டு வைரமுடைத்தாயபொழுது, தறுகண் மழுவும்
குடாரமுந் தாம் களைகிற்பவோ! - திண்ணிய மழு குடாரம் முதலிய வலிய கருவிகளும்
அதனைக் களைந்தொழிக்க வல்லுநவல்லவாம், (எ - று.)


     வட்குதல் - உள்வைரம் செறிதல். உட்குதல் - அஞ்சுதல், மழு குடாரம் என்பன கோடரிகளின் பேதங்கள்.

     “இளைதாக முண்மரங் கொல்க களையுநர்
     கைகொல்லும் காழ்த்த விடத்து“ (திருக். 879)

என்றார் திருவள்ளுவர்.
 

( 72 )

 

645.

சிறிய வென்றிக ழார்பகை சென்றுசென்
றறிய 1லாவவன் றாலணி மாமலர்
வெறியும் வேரியும் விம்மி விரிந்துதேன்
செறியுந் தொங்கற்செம் பொன்முடி மன்னனே.
 

     (இ - ள்.) பகைசென்று சென்று அறியலாவ அன்று - பகைத்திறத்தை அடிக்கடி
சென்று நன்கு அறிந்து கோடலும் எளிதன்று, சிறிய என்று இகழார் - ஆதலின்
பகைத்திறந்தெரிவார் பகைசிறி தென்றிகழ்வாரல்லர், அணிமாமலர் வெறியும் வேரியும்
விம்மி விரிந்து தேன் செறியும் தொங்கல் - அழகிய மணமிக்க மலர்களையும்
வெட்டிவேரையும் செறியவைத்துக் கட்டப்பட்ட மையால் நெருக்குற்று விரிந்து
தேன்நிறையும் மாலையை அணிந்த, செம்பொன் முடிமன்னனே - செம்பொன்னாலாய
முடியினை உடைய எம் அரசே, (எ - று.)

     பகைவர் வளர்ச்சியுறும் பொழுது நம்மால் அறியப்படாதபடி வளர்ந்து விடுவர்.
அவர்கள் வளர்வதை ஒற்றர் முதலியோரால் அறிதலும் எளியதன்று, ஆகலின் அச் சிறிய
பகையைத் தோன்றியபொழுதே அழித்து விடுதல் நன்று என்று அமைச்சர்கள் கூறுகின்றனர்.
ஆவ அன்று : ஒருமை பன்மை மயக்கம்.
 

( 73 )

அரிமஞ்சு என்னும் அமைச்சன் கூற்று
646.

அஞ்சி நின்றவர் கூறிய பின்னரி
மஞ்சு வென்பவன் சொல்லுமற் றாங்கவன்
செஞ்செ வேபகை யாமெனிற் றேர்ந்துகண்
டெஞ்சி றொல்புக ழாய்பின்னை யெண்ணுவாம். 

     

 

     (பாடம்) 1. லாவவென்றாலணி.