நீண்டதற்பின் - அம்முண்மரம் நீண்டு வைரமுடைத்தாயபொழுது, தறுகண் மழுவும் குடாரமுந் தாம் களைகிற்பவோ! - திண்ணிய மழு குடாரம் முதலிய வலிய கருவிகளும் அதனைக் களைந்தொழிக்க வல்லுநவல்லவாம், (எ - று.) வட்குதல் - உள்வைரம் செறிதல். உட்குதல் - அஞ்சுதல், மழு குடாரம் என்பன கோடரிகளின் பேதங்கள். “இளைதாக முண்மரங் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த விடத்து“ (திருக். 879) என்றார் திருவள்ளுவர். |
(இ - ள்.) பகைசென்று சென்று அறியலாவ அன்று - பகைத்திறத்தை அடிக்கடி சென்று நன்கு அறிந்து கோடலும் எளிதன்று, சிறிய என்று இகழார் - ஆதலின் பகைத்திறந்தெரிவார் பகைசிறி தென்றிகழ்வாரல்லர், அணிமாமலர் வெறியும் வேரியும் விம்மி விரிந்து தேன் செறியும் தொங்கல் - அழகிய மணமிக்க மலர்களையும் வெட்டிவேரையும் செறியவைத்துக் கட்டப்பட்ட மையால் நெருக்குற்று விரிந்து தேன்நிறையும் மாலையை அணிந்த, செம்பொன் முடிமன்னனே - செம்பொன்னாலாய முடியினை உடைய எம் அரசே, (எ - று.) பகைவர் வளர்ச்சியுறும் பொழுது நம்மால் அறியப்படாதபடி வளர்ந்து விடுவர். அவர்கள் வளர்வதை ஒற்றர் முதலியோரால் அறிதலும் எளியதன்று, ஆகலின் அச் சிறிய பகையைத் தோன்றியபொழுதே அழித்து விடுதல் நன்று என்று அமைச்சர்கள் கூறுகின்றனர். ஆவ அன்று : ஒருமை பன்மை மயக்கம். |