(இ - ள்.) தூதிர்காள் - தூதர்களே! இறைவளை மகளிர் போல் கழறி என்னை - முன்கையில் வளையலணிந்துள்ள மகளிர்களைப்போல் பாரித்துப் பேசுதலால் யாது பயன்! எங்குறை இது கூறுமின் சென்று - யாம் உங்கோமான்பாற் கூறும் எமது குறையொன்றனை எம்பொருட்டு நீயிரே அவன்பால் சென்று சொல்லுக! (அக்குறையாதெனில்) திறையினை மறுத்தவர் திறத்து - திறைப்பொருள் இறுக்க மறுக்கின்றவரிடத்தே, செய்வதோர் முறையுளதெனின் - நீங்கள் இயற்றுகின்ற முறை பிறிதுளதாயின், அது முயன்று கொள்கவே - அம்முறையானே நீயிர் முயன்று இயல்வதாயின் நுங்கள்திறைப் பொருளைக் கொள்க என்பதே, (எ - று.) மகளிர்போன்று பலபடப் பேசிப் பயன் என்னை? தூதர்களே திறை தரமறுப்போர் திறத்து நீயிர் மேற்கொள்ளும் செயலை மேற்கொண்டு வல்லிரேல் பெறுக! இவ்வேண்டுகோளை நும் அரசற்குக் கூறுக என்றான் என்க. |
(இ - ள்.) உட்க ஆங்கு உரைத்தலும் - கேட்டோர் அஞ்சுமாறு திவிட்டன் அங்ஙனம் கூறியவுடன், ஒளிர்பொன் மாழையும் - ஒளியுடைய அழகிய பொற்குவியல்களும், கள்கமழ் கோதையர் கணமும் - தேன் மணம் கமழ்கின்ற கோதையணிந்த மகளிர் கூட்டமும், மீண்டது - விச்சாதரரிடத் தினின்றும் மீட்கப்பட்டன, தூதர் - அத்தூதர்களும், வட்கி - ஒளிகுன்றி, துட்கெனும் மனத்தினர் - துண்ணென அஞ்சிய நெஞ்சினராய், நம் இறைவற் குத்தெவ் வலிது எனஏகினார் - நம் அரசனாகிய அச்சுவகண்டனுக்கு வலிமைமிக்க பகைஒன்று தோன்றியுளது என்று நினைந்து வந்தவழியே மீண்டு ஏகினார், (எ - று.) மீண்டது, ஒருமைபன்மை மயக்கம். கேட்டோர் அஞ்சுமாறு நம்பி சினந்து இவ்வாறு கூறியவுடன், தூதர் மனம் நடுங்கி, அச்சுவகண்டற்கு அரும்பகை ஒன்று புதிதாகத் தோன்றியுளது என்று கருதிப் போயினர் என்க. |