பக்கம் : 479
 

 

701.

ஆங்குத் தூதுவ ரதிர்முகி லாறுசென் றிழிந்து
பூங்கட் டேமொழிப் போதனத் திறைவன்றன் புதல்வர்
வீங்கு பைங்கழல் விடுசுடர் மிடைமணிப் பூணோர்
ஓங்கு தானையோ டுலாப்போந்த விடஞ்சென்றீ துரைத்தார்.
 

     (இ - ள்) ஆங்குத் தூதுவர் - அவ்விடத்தே தூதர்கள், அதிர்முகில் ஆறு சென்று
இழிந்து - முழங்குகின்ற மேகமண்டலத்தின் வழி விரைந்து சென்று இறங்கி, பூங்கண்
தேமொழிப் போதனத்திறைவன்றன் - அழகிய கண்களையுடையவனும் இன்சொல்
மொழிபவனும் போதனமாநகரத்து மன்னனும் ஆகிய பயாபதி வேந்தனுடைய, புதல்வர் -
மக்களாகிய விசயதிவிட்டர்கள், வீங்கு பைங்கழல் - விசைத்துக்கட்டிய பசிய
பொன்னாலாகிய கழல் அணிந்தவராகி, விடுசுடர் மிடைமணிப்பூணோர், வீசுகின்ற
ஒளிக்கற்றைகள் நெருங்கிய அணிகலன்களைப் பூண்டவர்களாய், ஓங்கு தானையோடு, -
மிக்க படைகளுடனே, உலாப்போந்த இடம் சென்று - உலாவுதல் நிமித்தமாச் சென்றுள்ள
ஓரிடத்திற் சென்று கண்டு, ஈது உரைத்தார் - இவ்வார்த்தையைச் சென்னார், (எ - று.)

     வீங்கு - வீக்கு. மெலித்தல் விகாரம், அத்தூதர்கள், அவ்வாறே விசும்பின்
வழிச்சென்று; விசயதிவிட்டர்களை உலாப் போமிடத்தே கண்டு பின் வருமாறு கூறினார்
என்பதாம்.
 

( 129 )

தூதர்கள் திவிட்டனுக்கு இயம்புதல்
702.

திறையின் மாற்றமுந் திறையினை விலக்கிய திறமும்
குறையென் றெங்களைக் குமரநீ பணித்ததுங் கூற
வறையும் பைங்கழ லாழியந் தடக்கையெ மரைச
னறையுங் குஞ்சியா னன்னுநன் றெனச்சொல்லி நக்கான்.
 

     (இ - ள்.) குமர - இளைய வேந்தே, திறையின் மாற்றமும் - திறைப்பொருள்
கொண்ட செய்தியும், நீ திறையினை விலக்கிய திறமும் - பின்னர் நீ திறைகொடேன் என்று
அவற்றை விலக்கிய செய்தியும், குறையென்று எங்களைப் பணித்ததும் கூற - எம் குறையாக
உம் அரசனிடம் கூறுக என நீ கட்டளையிட்ட செய்தியும் எம் அரசன்பால் யாம்
கூறினேமாக, அறையும் பைங்கழல் ஆழியந் தடக்கை எம் அரசன் - ஆரவாரிக்கின்ற பசிய
வீரக்கழலணிந்தவனும் சக்கரப்படையேந்திய பெரிய கைகளையுடைய வனும் எம்முடைய
அரசனும் ஆகிய, நறையும் குஞ்சியான் - மணங்கமழும் தலைமயிரையுடைய
அச்சுவகண்டன், நன்று நன்று எனச்சொல்லி நக்கான் - சினமிக்கு நன்றுநன்று என்று கூறி
நகைத்திட்டான், (எ - று.)