பக்கம் : 485
 

     (இ - ள்.) புழல்கை மால்களிறு - தொளையமைந்த துதிக்கையையுடைய பெரிய
யானையினது, எருத்திடை புரோசையிற் பயின்ற - பிடரிற் கட்டப் பட்டுள்ள புரோசைக்
கயிற்றில் மிதித்துப் பயின்ற, கழல்கொள் சேவடி வீரக்கழலையணிந்த செந்நிற அடிகள்,
கருவரை இடைநெறி கலந்த - கரிய மலைகளின் ஊடே செல்லும் வழிகளில் பரவியுள்ள,
அழல் கொள்வெம் பொடி அவைமிசை - வெப்பமிக்க வெவ்விய மணலின்மேல், புதைய -
பதியும்படி, அவ்வரிமான் - அந்தச் சிங்கம், தொழிற்கொண்டு - கருமத்தை மேற்கொண்டு,
ஆருயிர் செகுக்கின்ற சூழல் - அரிய உயிர்க்குலங்களைக் கொன்றழிக்கின்ற இடத்தை,
சென்று அடைந்தார்- போய்ச் சேர்ந்தோர், (எ-று.)
புரோசை - யானைக் கழுத்திடு கயிறு.

     யானையெருத்தத்தே புரோசைக் கயிற்றிலே மிதித்துப் பயின்ற தம் சேவடி நெறி
கலந்த வெம்பொடியிற் புதையச் சென்று அரிமா ஆருயிர் செகுக்கின்ற சூழலை அடைந்தார்
என்க.
 

( 139 )

அம் மாய அரிமாவின் முழக்கம்

712.

அடைந்த வீரரைக் காண்டலு மழலுளை யரிமா
வுடைந்து போகவோ 1ரிடியிடித் தெனவுடன் றிடிப்ப
விடிந்து போயின விறுவரைத் துறுகலங் குடனே
பொடிந்து போயின பொரியென நெரிவொடு புரளா.
 

      (இ - ள்.) அடைந்த வீரரைக் காண்டலும் - அவ்வாறு வந்து சேர்ந்த விசய
திவிட்டர்களைப் பார்த்தவுடனே, அழல் உளை அரிமா - தீயை ஒத்த பிடரிமயிர்க்
கற்றையையுடைய (அரிகேதுவாகிய) அச்சிங்கம், உடைந்துபோக - அவ்வீரர்கள்
மனமுடைந்து ஓடிவிடுதலைக் கருதி, ஓர்இடி இடித்தென - ஒப்பற்ற பெரிய இடி ஒன்று
இடித்தாற்போல, உடன்று இடிப்ப - சினந்து முழங்க, இறுவரை இடிந்துபோயின - அம்
முழக்கத்தின் அதிர்ச்சியால் பெரிய மலைகள் இடிந்து சிதறின, அங்குடனே -
அப்பொழுதே, துறுகல் - குறுங்கற்கள், நெரிவொடு புரளா - நெரிந்து புரண்டு, பொரி
எனப் பொடிந்து போயின - நெற்பொரிகளைப் போலத் துகளாய் உதிர்ந்தன. (எ - று).
துறுகல் - சிறிய குன்றுமாம்.
     விசயதிவிட்டரைக் கண்டவுடன் அரிகேதுவாகிய அவ்வரிமா, அவர்கள் அஞ்சி
ஓடுதலை விரும்பி, இடி இடித்தென முழங்க, மலை துறுகல் முதலியன பொடிந்தனவாய்,
பொரிகள்போல் துள்ளிப் புரண்டன என்க.

( 140 )


     (பாடம்) 1. இடிப்பிடித்தென.