பக்கம் : 486
 

அவ் வரிமாவின் எதிர் திவிட்டன் போர்க் கோலம் பூண்டு முழங்குதல்

713.

காளை - காளொளி முகில்வண்ணன் கழல்களை விசியாத்
தோளின் மேற்செலச் சுடர்விடு கடகங்கள் செறியாச்
சூளி மாமணித் தொடர்கொண்டு சுரிகுஞ்சி பிணியா
ஆளி மொய்ம்பனங் கார்த்தன 2னுடைந்ததவ் வரியே.
 

    (இ - ள்.) காளை - காளையை ஒத்த தோற்றமுடையவனும், ஆளி மொய்ம்பன் -
சிங்கத்தை ஒத்த வலியுடையவனும் காள் ஒளி - கரிய நிறமுடைய, முகில்வண்ணன் -
மேகம் போன்ற நிறமுடையவனும் ஆகிய திவிட்டனும் கழல்களை விசியா - வீரக்கழல்களை
இறுகக் கட்டி, சுடர்விடு கடகங்கள் தோளின் மேற்செலச் செறியா - ஒளிவீசும் கடகம்
என்னும் அணிகலன் தோளின் மேல் ஏறச்செறித்து, சூளிமாமணிகொண்டு -
சூளா மணிமாலையைக்கொண்டு, சுரிகுஞ்சி பிணியா - சுரிந்த - தலைமயிரை வரிந்துகட்டி,
அங்கு - அவ்விடத்தே, ஆர்த்தனன் - ஆரவாரித்தான், அவ்வரி உடைந்தது -
அவ்வொலியின் அதிர்ச்சியால் அம்மாயச்சீயம் அஞ்சி ஓடலாயிற்று, (எ - று.)

     சூளி மாமணிமாலை - தலைமயிரைச் சுற்றிக்கட்டும் மணிமாலை. காளம் - கருப்பு -
அது காள், என விகாரப்பட்டது.

     அவ்வரிமா முழங்குதலைக் கேட்ட திவிட்டன், கழல் விசித்துக் கடகங்களை
ஏறச்செறித்து, குஞ்சி பிணித்துத் தானும் ஆரவாரித்தான்; உடனே அவ் வரிமா அஞ்சி உடைந் தோடிற்றென்க.
 

( 141 )

அஞ்சி ஓடும் அரிமாவைத் திவிட்டன் தொடர்தல்

714.

எங்குப் போவதென் றுடைநெறி யிறுவரை நெரியப்
பைங்கட் கோளரி யுருவுகொண் டவன்மிசைப் படர்ந்து
வெங்கட் கூற்றமுந் திசைகளும் விசும்பொடு நடுங்கச்
செங்கட் காரொளி நெடியவன் 2விசையினாற் சிறந்தான்.

      (இ - ள்.) செங்கண் காரொளி நெடியவன் - சிவந்த கண்ணையும் கருநிற
மேனியையுமுடைய நெடுமாலாகிய திவிட்டன், எங்குப் போவது என்று - எனக்குத் தப்பி நீ
எங்குத்தான் செல்வாய்! என்று, உடைநெறி - சிதர்ந்து கிடக்கும் நெறியினூடே, பைங்கண்
கோளரி உருவு கொண்டவன் மிசைப் படர்ந்து - பசிய கண்களையுடைய
அரிமாவுருக்கொண்ட அரிகேதுவைப் பின்தொடர்ந்து துரத்திச்சென்று, வெங்கண் கூற்றமும்
திசைகளும் விசும் பொடும் நடுங்க - வெவ்விய கண்ணையுடைய மறலியும் எட்டுத்
திசைகளும் விண்ணும் நடுநடுங்குமாறு, விசையினாற் சிறந்தான் - விசைத்து ஓடுதலிலே
சிறந்தவனானான், (எ - று.)

 

     (பாடம்) 1. உடைந்தவவ். 2. விசையொடுஞ் - விசையொடு.