(இ - ள்.) அங்கு - அங்ஙனம் ஓடுமிடத்தே, கழல் ஆர்த்தில - வீரக்கழல்கள் ஒலித்தன இல்லை, கால்களும் நிலம் உறா - கால்கள் நிலத்தின் மேல் பொருந்தவில்லை, முடங்கா - முடங்கவில்லை, அழலும் செஞ்சுடர்க் கடகக்கை அவை - மிளிருகின்ற செவ்விய ஒளியையுடைய கடகமணிந்த கைகள், புடைபெயரா - பக்கத்தே இயங்கவில்லை; குழலும் குஞ்சியும் - குழற்சியையுடைய தலைமயிரும், மாலையும் - மலர்மாலையும்,தொடரும் - மணிமாலைகளும், எழிலும் தோளிலும் எருத்திலும் கிடந்தில எழுந்தே - அழகு செய்யும் தோளின் மேலும் பிடரின் மேலும் பொருந்தியபடி கிடந்தில, வேகத்தால் மேல் எழுந்தபடியே நின்றன, (எ - று.) குழலுதல் - குழற்சியுடைத்தாதல். அது, குழலுடைச் சிகழிகைக் குமரன் தோளினை (சிந்தா - குண - 242) என வரும் சிந்தாமணியானும், தொடையமை நெடுமழைத் தொங்கலாமெனக் கடைகுழன்று என்னும் (சூர்ப் - 23) இராமாவதாரத்தானும் அறிக. எழிலுதல் - அழகு செய்தல். கழல் முதலியன ஒலித்தில. குஞ்சி மாலை முதலியன எழுந்தபடியே நின்றன; அவ்வளவு விரைவின் ஓடினன் என்பதாம். |