பக்கம் : 492
 

பிடித்தான் - வலிய பெரிய தன் கைகளால் பற்றினான், அப்பெருவலி அரி - அந்தப்
பேராற்றலுடைய அரிமா, பிளந்து போழ்களாய்க் கிடந்தது - அவ்வளவில் பிளக்கப்பட்டு
இரு பிளவுகளாகிக்கிடந்தது, (எ - று.)

     அவ்வரிமா நம்பியின் குருதியைக் குடிக்க எண்ணி எழலும் அதன் பிடர்மிசை
மிதித்து வாயிடைப் பற்றிப் பிடித்தான். அத்துணையே கண்டது, அச்சிங்கம் இருபிளவாய்க்
கிடந்தது என்க.
இங்ஙனமே கம்பரும்,

     “கடுப்பினில் யாரும் அறிந்திலர் கையால்
     எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்“ (கார்முக - 34)

என்று கூறுதல் காண்க.
 

( 151 )

அமரர்களின் வியப்பு
724.

சீய 1மாயிரஞ் செகுத்திடுந் திறலது வயமா
வாய வாயிர மாயிர மடுதிற லரிமா
ஏயெ 2னாமுனிங் கழித்தன 3னிவனெனத் தத்தம்
வாயின் 4மேல்விரல் வைத்துநின் றமரர்கண் மருண்டார்.

     (இ - ள்.) அமரர்கள் - தேவர்கள், அடுதிறல் அரிமா - கொல்லுதல் வல்ல
இச்சிங்கம், சீயம் ஆயிரம் செகுத்திடும் - தன்னினமான ஆயிரம் சிங்கங்களைத் தனி நின்று
கொல்லும், வயமா - யானைகளையோ எனில், ஆய ஆயிரம் ஆயிரம் - பல்லாயிரம்
யானைகளை ஒருங்கே கொன்றழிக்கும், ஏஎனாமுன் இங்கு இவன் அழித்தனன் என - ‘ஏ‘
என்று உச்சரிக்கும் இரு கணப்போதிற்கும் முன் இவ்விடத்தே இத்திவிட்டன் இத்தகைய
சிங்கத்தைக் கொன்றழித்தான் என்று கூறி, தத்தம் வாயின்மேல் விரல்வைத்து நின்று -
தங்கள் தங்கள் வாயில் விரல்களைச் சேர்த்தி நின்று, மருண்டார் - மருட்கையை
எய்தினார், (எ - று.)

     மருளுதல் - வியப்பெய்தல், ஏ எனாமுன் : குறிப்புமொழி, ஒரு நொடிப்பொழுதில்
என்றவாறு ஆயிரம் அரிமாக்களையும், எண்ணிறந்த யானைகளையும் தனிநின்று வெல்லும்
ஆற்றலுடைய இவ்வரியரசை, நம்பி ஒரு நொடிப்போதிற் கொன்றனனே! என அமரர்கள்
வாயில் விரல் சேர்த்தி வியந்தார் என்க. வயமா - வலியுடைய சிங்கம் புலி ஆளி
முதலியவற்றிற்குப் பெயர்.
 

( 152 )

திவிட்டன் அவ்வரிமாவைப் பிளந்து கொல்லுதல்

725.

அழிந்த கோளரிக் குருதிய தடுங்கடங் களிற்றோ
டொழிந்த வெண்மருப் புடைந்தவு மொளிமுத்த மணியும்
பொழிந்து கல்லறைப் பொலிவது குலிகச்சே றலம்பி
யிழிந்த கங்கையி னருவியொத் திழிந்தவவ் விடத்தே.

    


      (பாடம்) 1. மாயிர மாயிரஞ் செகுத்திடு திறல. (துவயமா, இது ஏட்டில் இல்லை).2. ணாமையிங். 3. னிதுவெனத். 4. மெல் விரல்.