பக்கம் : 493
 

     (இ - ள்.) அழிந்த கோளரி - திவிட்டனால் கொல்லப்பட்ட அச்சிங்கத்தினுடைய,
குருதி - செந்நீர், அது அரும் கடம் களிற்றோடு ஒழிந்த வெண்மருப்பு - அவ்வரிமா
முன்னர்க் கொன்ற யானைகளின் வெள்ளிய கோடுகள் உடலைவிட்டு வேறா ஒளிந்து
கிடந்ததனவும், உடைந்தவும் - அக்கோடுகள் உடைந்தனவும், ஒளிமுத்தமணியும் - உடைந்த
அக்கோட்டினின்றும் சிதறி ஒளியுடன் கிடந்த முத்தாகிய மணிகளும் ஆகியவற்றை வரன்றிக்
கொண்டு, பொழிந்து கல்லறைப் பொலிவது - ஒழுகி அக்கற்பாறைக்கண் விளங்குவது;
குலிகச்சேறலம்பி இழிந்த கங்கையின் அருவியொத்து - சாதிலிங்கக் குழம்பை அளையிஇப்
பாயும் கங்கையாற்றின்
அருவியைப்போல, அவ்விடத்தே இழிந்தது-அம்மலைச்சாரலில் ஓடிற்று,(எ-று.)

     அவ்வரிமாவின் குருதி, ஆண்டுக்கிடந்த ஆனைவெண்கோடு முதலியவற்றை
அளைந்து சாதிலிங்கக் குழம்பை அலம்பிப் பெருகிய கங்கையின் அருவி ஒத்து ஒழுகியது.
கோளரிக்குருதி பொலிவது அவ்விடத்தே கங்கை அருவியை ஒத்து இழிந்ததென்க.
 

( 153 )

திவிட்டனின் சால்புடைமை

726.

யாது மற்றதற் குவந்திலன் வியந்தில னிகலோ
னோத நித்திலம் புரிவளை யொளியவற் குறுகி
யேத மற்றிது கடிந்தன 1னின்னினி யடிகள்
போதும் போதன புரத்துக்கென் றுரைத்தனன் புகழோன்.
 

     (இ - ள்.) இகலோன் - போர் ஆற்றல் மிக்கவனும், புகழோன் - புகழ்மிகுந்தவனும்
ஆகிய திவிட்டன், யாதும் மற்றதற்கு உவந்திலன் வியந்திலன் - ஒருசிறிதும் இப்பெருஞ்
செயல் செய்தமைபற்றி மகிழ்தலும் வியத்தலும் இலனாய், ஓதநித்திலம் புரிவளை
ஒளியவற்குறுகி - கடலிற்பிறந்த முத்துப்போன்றும் வலம்புரிச் சங்குபோன்றும்
வெள்ளொளிவண்ணனாகிய விசயனிடம் சென்று, ஏதம்மற் றிது கடிந்தனன் - இத்தீமையை
அழித்தொழித்தேன், அடிகள் - அடிகளே! இன்னினி - இப்பொழுதே, போதனபுரத்துக்கு -
நம் போதனமாநகரத்திற்கு, போதும் - செல்வோம், என்று உரைத்தனன் - என்று கூறினான் (எ - று)

     அமரர்களும் வியத்தற்குரிய இவ்வருஞ்செயலைச் செய்த திவிட்ட நம்பி, அதுபற்றி
உவப்பும், வியப்பும் இலனாய் விசயனிடம் சென்று, ‘இத்தீமை தவிர்க்கப்பட்டது. இனியாம்
போதனத்திற்குச் செல்வேம்‘ என்றான் என்க. உவத்தலும், வியத்தலும் இலன் என்றது,
நம்பியின் பெருந்தகைப் பண்பினைப் பாராட்டியபடி.

( 154 )


     (பாடம்) 1. றென்றினி னன்றியும்.