பக்கம் : 497
 

இவை, உவரிமாக்கடல் நுரையென - உப்புநிரையுடைய பெரிய கடலிடத்துள்ள நுரை
போன்ற. மயிர - மயிர்க்கற்றையை உடையனவாய், வார்புனத்து அவரை மேய் அருந்தி -
நெடிய காட்டிடத்தே தம் மேய்ச்சலாகிய அவரைக் கொடிகளைத் தின்று, அருவிநீர் பருகி -
அருவிகளில் நீர்குடித்து, புடைபெயர்வன - மலையிடங்களிற் குழாங்கொண்டு
இயங்குவனவாகிய, கவரிமா - கவரி மான்களின் அழகை, (எ - று.)

     கடலின் நுரைபோன்ற வெளிய மயிர்க்கற்றையை உடையனவாய், அவரைக் கொடியை
மேய்ந்து, அருவிநீர் பருகி, மலையிடத்தே வெண்மேகங்கள் தவழ்ந்தாற் போன்று,
நிரைநிரையாச் செல்வன, கவரிமான்களாம்; அவ்வழகினைக் காண் என்றான் என்க.
 

( 160 )

வேறு
733.

துள்ளிவா ரும்புனற் றுளங்குபா றைக்கலத்
துள்ளுரா விக்கிடந் தொளிருமொண் கேழ்மணி
நள்ளிரா வின்றலை நகுபவா னத்திடைப்
பிள்ளைநா ளம்பிறை 1பிறழ்தல்போ லுங்களோ.
 

      (இ - ள்.) துள்ளி வாரும் புனல் துளங்கும் - துள்ளுதலுடனே ஒழுகும் நீர்
ததும்புகின்ற இயல்புடைய, பாறைக்கல் அத்துள் - பாறையாகிய சந்திரகாந்தக் கல்லினது
அகத்தே, உராவிக்கிடந்து - உராய்ந்து கிடந்து, ஒளிரும் ஒண்கேழ்மணி - ஒளிருகின்ற
நிறங்கெழீஇய முத்து, நள்ளிராவின்றலை - நடுஇராவின்கண், நகுப - விளங்குவன,
வானத்திடை - விசும்பின்கண், நாள் அம்பிள்ளைப்பிறை - தோன்றுதற்குரிய
நாளிற்றோன்றிய அழகிய இளம்பிறை, பிறழ்தல் போலுங்கள் - ஒளிர்வதை ஒக்கும்,
(எ - று.)

     பாறைக்கலத்துள் - பாறைக்கல் அத்து உள், எனப்பிரித்திடுக - அத்து; சாரியை,
போலுங்கள்; கள் விகுதிமேல் விகுதி. பாறையிடத்தே ஒளிரும் ஒண்கேழ் மணி, நள்ளிரவில்
ஒளிரும் பிறைபோலுதலைக் காண்; என்றான் என்க.
 

( 161 )

 

734.

வழையும்வா ழைத்தடங் காடுமூ டிப்புடங்
கழையும்வே யுங்கலந் திருண்டுகாண் டற்கரு
முழையுமூ ரிம்மணிக் கல்லுமெல் லாநின
திழையினம் பொன்னொளி யெறிப்பத்தோன் றுங்களே. 

  


     (பாடம்) 1. பிறழ்ச்சி.