பக்கம் : 505
 

     (இ - ள்.) தா இல் சீர் தாமரை தகு குணச்செல்வன் - குற்றமற்ற பெரும்புகழ்
படைத்த, தாமரை என்னும் எண்ணளவு உயர்ந்த தகுதியுடைய குணங்களையே செல்வமாக
வுடையோனே, தாம் மரை தடத்திடை - தாவுகின்ற மான்கள் மிக்க இந்நிலத்தின்கண்ணே,
சாரல்வாய் தாமரைமலர்ந்த - சார்பிடங்களிலே தாமரைகள் மலர்ந்துள்ளன, துளையொடு, -
மாதுளை மரங்களோடே, மறலி - குங்கும மரங்களும், சண்பகம் தாம் - சண்பக மரங்களும்,
அரைதடித்து - அடிப்பகுதி பருத்து, அலர் ததைந்து - மலர்கள் செறிந்து, தோன்றும் -
தோன்றா நிற்கும், (எ - று.)

     தாமரை - ஓரெண். செல்வன் - அண்மை விளி. மறலி - குங்குமமரம் துளை -
மாதுளை, (தலைக்குறை) இந் நிலத்தேயும் மருதநிலத்திற்குரிய தாமரைத் தடங்கள்
திகழ்கின்றன; சண்பகம் குங்குமம் முதலிய மரங்களும் பருத்து வளமுடையனவாய்த்
திகழ்கின்றன; என்றபடி.
 

( 176 )

வேறு
749.

நாகஞ் சந்தனத் தழைகொண்டு நளிர்வண்டு கடிவ
நாகஞ் சந்தனப் பொதும்பிடை நளிர்ந்துதா துமிழ்வ
நாகஞ் செஞ்சுடர் நகுமணி யுமிழ்ந்திருள் கடிவ
நாக மற்றிது நாகர்தம் முலகினை நகுமே.
 

      (இ -ள்.) நாகம் - யானைகள், சந்தனத் தழைகொண்டு - சந்தன மரத்தின்
தழைகளை ஒடித்துக்கொண்டு, நளிர்வண்டு ஓச்சும் - தம்மேல் மொய்த்துச் செறியும்
அளிகளை ஓட்டும், நாகம் - சுரபுன்னைமரங்கள், சந்தனப் பொதும்பிடை - சந்தன
மரச்சோலையின் ஊடே, நளிர்ந்து - செறிந்து, தாது - மகரந்தப்பொடிகளை, உமிழ்வ -
உதிர்க்கும், நாகம் - பாம்புகள், செஞ்சுடர் - ஞாயிற்றை, நகும் - ஒவ்வாய் என
நகைக்கும்மணி - மணியை, உமிழ்ந்து இருள் கடிவ - கான்று இருளை அகற்றும், நாகம் மற்றிது - இம்மலை, நாகர்தம் உலகினை நகும் - தேவருலகத்தை என்னை ஒவ்வாய் எனச்
சிரிக்கும் என்பதாம், (எ - று.)

     முதல் அடியில் நாகம் - யானை; இரண்டாமடியில் நாகம் - சுரபுன்னை மரம்;
மூன்றாமடியில் நாகம் - பாம்பு; நாலாமடியில் நாகம் - மலை.
 

( 177 )

வேறு

750.

நகுமலரன நறவம் மவைசொரி வனநறவம்
தொகுமலரன துருக்கம் மவைதரு வனதுருக்கம்
மகமலரன வசோகம் மவைதருவ வசோகம்
பகுமலரன பாங்கர் பலமலையன பாங்கர்.