பக்கம் : 508
 

     (இ - ள்.) முன் - நம்முன்பு அதோ; பொன் விரிந்தனைய பூங்கோங்கும் வேங்கையும்
- பொன்னை விரித்தாற்போன்று மலர்ந்து திகழும் அழகிய கோங்கமரமும் வேங்கைமரமும்,
விரிந்து உக்கன - தாம் மலர்ந்து சொரிந்தனவாகிய பூக்கள், மொய்த்த கற்றலம் - செறிந்த
கல்லிடங்கள், மின்விரிந்து இடை இடை விளங்கி - ஒளிவீசுமாறு இடையிடையே திகழ்ந்து
தோன்றி, இருள்முகில் - இருண்டமேகம், இந்திரன் வில்முறிந்து வீழ்ந்த போலும் -
இந்திரவில்லோடு முறிந்து வீழ்ந்து கிடத்தலை ஒக்கும், (எ - று.)

     கோங்கம்பூவும் வேங்கைப்பூவும் உதிர்ந்து கிடக்கும் கற்பாறை, இடையிடையே
மின்னல் விரிந்து தோன்றும் முகில்கள் வில்லோடே வீழ்ந்து கிடப்பனபோற் றோன்றும்
என்க.
 

( 182 )

 
755.

நிழற்பொதி நீலமா மணிக்க லந்திரள்
பொழிற்பொதி யவிழ்ந்தபூப் புதைந்து தோன்றுவ
தழற்பொதிந் தெனத்துகி றரித்த காஞ்சியர்
குழற்பொதி துறுமலர்க் கொண்டை போலுமே.
 

      (இ - ள்.) நிழல்பொதி நீலமா மணிக்கல் - ஒளிமிக்க நீல நிறமுடைய மரகதக்
கல்லினது, அம் திரள் - அழகிய குவியல், பொழில் பொதிய விழ்ந்தபூ - பொழிலில்
மலர்ந்துக்க பூக்களில், புதைந்து தோன்றுவ - புதைந்து சிறிதே தோன்றும் காட்சி, தழல்
பொதிந்தென - தீப்பிழம்பினை அகத்திட்டு மூடினாற்போன்று, துகில் தரித்த காஞ்சியர் -
காஞ்சி என்னும் மணிவடத்தை அகத்திட்டு உடுத்த துகிலையுடைய மகளிருடைய,
குழல்பொதி துறுமலர்க் கொண்டைபோலும் - கூந்தலை மறைக்கும் செறிந்த மலராலாய
மலர்வளையத்தை ஒக்கும், (எ - று.)

     காஞ்சியர் பதினாறுகோவை மணிவடம் அணிந்த மகளிர். மலர்களால் மூடப்பட்ட மணித்திரள் மகளிர் மலர்க்கொண்டையை ஒத்துத் தோன்றும் என்க.
 

( 183 )

வேறு

756.

மேவுவெஞ் சுடரொளி விளங்கு கற்றலம்
தாவில்பூந் துகளொடு ததைந்து தோன்றுவ
பூவுக விளையவர் திளைத்த பொங்கணைப்
பாவுசெந் துகிலுடைப் பள்ளி போலுமே.
 

     (இ - ள்.) மேவு வெஞ்சுடரொளி விளங்கு கற்றலம் - தோன்றிய திங்களின்
நிலாவொளி படர்ந்து விளங்கும் கல்லிடம், தாவில் பூந்துகளொடு ததைந்து - குற்றமற்ற
பூந்தாதுக்கள் செறிந்து, தோன்றுவ - தோன்றுவன, இளையவர் பூவகத் திளைத்த
பொங்கணை - காதலிளைஞர்கள் பூக்கள்