பக்கம் : 521
 

     ஈங்கு இவ் வெங்கடும் கானகத்து ஈடு என - இவ்விடத்தாகிய வெப்பமிக்க கடிய இப்
பாலைக்காட்டின் தன்மையை என்று, ஏங்கும் நீர்க்கடல் வண்ணனுக்கு - முழங்குகின்ற
நீரையுடைய கடலை ஒத்த நீலவண்ணானாகிய திவிட்டனுக்கு, வீங்கு வெண்டிரை வண்ணன்
- பெருக்குடைய வெளிய அலைகளை எறியும் பாற்கடல் போன்ற நிறமுடைய விசயன்
என்பான், இன்னணம் விளம்பினான் - இவ்வாறு கூறுவான் தொடங்கினான், (எ - று.)

     அப்பாலை நிலத்தைப்பற்றி விசயன் திவிட்டனுக்குக் கூறத் தொடங்கினன் என்பதாம்.
இனி வருவன பாலைநில வருணனை என்க.
 

( 206 )

 
779.

முழையு டைந்தழல காலு 1முரம்பயற்
கழையு டைந்துகு கண்கவர் நித்திலம்
மழையு டைந்துகு நீரென வாய்மடுத்
துழையு டைந்துகு தின்றன வூங்கெலாம்.
 

      (இ - ள்.) முழையுடைந்து அழல்காலும் - வெப்பமிகுதியால் குகைகள் வெடித்து
நெருப்பைக் கக்குகின்ற, முரம்பு அயல் - மேட்டுநிலத்தின் பக்கத்தேயுள்ள, கழையுடைந்து
உகும் கண்கவர் நித்திலம் - மூங்கில்கள் பிளந்து சிதறிய கட்பொறியைக் கவர்கின்ற
அழகுடைய முத்துக்களை, மழையுடைந்துகும் நீர்என - முகில்களினின்றும் சிதறிவீழும்
நீர்த்துளிகள் என்று கருதி, உழை - மான்கள், வாய்மடுத்து - வாய்க்கொண்டு, உடைந்து
உகுகின்றன - நீர் அன்மையால் மனமுடைந்து வீழா நிற்கும், ஊங்கெலாம் -
உவ்விடங்களின் எல்லாம், (எ - று,)

     வெப்ப மிகுதயால் மூங்கில் பிளந்து சொரியும் முத்துக்களைச் சேய்மைக் கண் நின்று
கண்ட மான்கள் மழைநீர்த் துளி என்று அங்கு ஓடி வாயிலேற்று நீரன்மை கண்டு
மனமுடைந்து விழும் என்க.
 

( 207 )

 

780.

மிக்க நீள்கழை மேல்விளை வுற்றழ
லொக்க வோடி யுறைத்தலி 2னான்மிசை
உக்க நெற்பொரி யுற்றொரு சாரெலாம்
தொக்க கற்றல மேற்றுடிக் கின்றவே.
 

     (இ - ள்.) ஒருசார்எலாம் - ஊங்கு ஒரு பகுதியிலெல்லாம், மிக்க நீள்கழைமேல் விளைவுற்று - மிக நீண்ட மூங்கிலின்மேல் விளைந்து, அழல் உற்று ஒக்க ஓடி உறைத்தலினான் - நெருப்புற்று அம்மூங்கிலின் ஊடே சென்று தாக்குதலாலே, மிசையுக்கநெல் - மேலிருந்து சிதறிய மூங்கில்நெல், தொக்க கல் தலம்மேல் - செறிந்த கற்பாறையின்மேல், பொரிஉற்று - வெப்பத்தாற் பொரிந்து, துடிக்கின்றவே - துள்ளுகின்றன,
 


     (பாடம்) 1. முரம்பயிற். 2. லிற்றான்.