பக்கம் : 53
 

தாழ்ந்து - விளங்கிப்படிந்து; இருண்ட கூந்தலார் - இருண்டுள்ள கூந்தலையுடையவர்கள்;
தூமத்துச் சுடர்ஒளி - கரியபுகையினூடே ஒளிர்கின்ற தீப்போன்று; துளும்பு - கூந்தலினூடு
ஒளிவிட்டு விளங்கும்; தோளினார் - தோள்களையுடையவர். வாமத்தின் மயங்கி -
அழகினோடு கலந்து; மைமதர்த்த - மையுண்டு மதர்க்கும்; வாள்கணார் - வாள்போன்ற
கண்ணையுடையவர்கள். (எ - று.)

     இன்பச் செயலிலே இருபாலாரும் மனம் ஒன்றுபட்டுப் பொருந்தாவழி இன்பம்
நிறைவுடையதாக மாட்டாது ஆகலின் “காமத்தொத்து அலர்ந்தவர்“ என்றார். இவ்விரு
செய்யுட்களாலும் அவ்வரசியரின் மாண்பு உரைக்கப்பட்டது. கதிர்த்த - ஒளிவிடுகின்ற -
கற்பிற்கு ஒளி புகழ். தூமம் - ஈண்டுக் கரும்புகை. அது கூந்தற்குவமை. துளும்புதல் - ஒளி
ததும்புதல். மதர்த்த - செருக்கிய.

( 26 )

பட்டத்து அரசிகள் இருவர்

62. 1ஆயிர ரவரவர்க் கதிகத் தேவியர்
மாயிரு விசும்பினி னிழிந்த மாண்பினார்
சேயிருந் தாமரைத் தெய்வ மன்னர் என்
றேயுரை யிலாதவ ரிருவ ராயினார்.
 
     (இ - ள்.) அவர் ஆயிரர் - அத்தகையோர் பயாபதி மன்னன் தேவிமார்
ஆயிரம்பேர் ஆவர்; அவர்க்கு - அவ்வாயிரம் மனைவியர்க்குள்ளும், அதிகம்
தேவியர்-சிறந்த மனைவியர் ஆனவர்கள்; மாஇரு விசும்பினின் - மிகப்பெரிய
விண்ணுலகத்தினின்றும்; இழிந்த மாண்பினார் - இறங்கினாற்போன்ற
சிறப்பையுடையவர்களும்; சேய்இருந்தாமரைத் தெய்வம் அன்னர் என்று - செந்நிறமுடைய
தாமரை மலரில் வாழ்கின்ற திருமகளைப் போன்றவரென்று இன்னோரன்ன; ஏய்உரை
இலாதவர் - கூறப்படும் உவமைச் சொல் எடுத்துக் கூறற்கு இடமில்லாதவர்களும் ஆகிய;
இருவர் ஆயினார் - இரண்டுபேர் உளர்ஆனார்கள். (எ - று.)

     அதிகத்தேவி - மிக்க பெருமையுடையதேவி - கோப்பெருந்தேவி என்க. மா - இரு :
மாயிரு : பொதுவிதிப்படி ‘மாவிரு’ என்று வகரவுடம்படுமெய்பெறாது, (நன். சூ. 239)
“இடையுரி“ என்ற புறனடைச்சூத்திரத்தின்படி
 

     (பாடம்) 1. ஆயிரரவரவற் கதிகற் றேவியர்.