பக்கம் : 530
 

     நெருங்கி நிற்கும் தோற்றம் கரிய கடல் பரவிக் கிடப்பதுபோல் தோன்றும் என்க.
 

( 223 )

 

796.

ஏறுகொண்ட கோவல ரேந்து 1தண்ண வக்குரன்
மாறுகொண்ட கோடியர் மணிமுழா முழங்கலிற்
றூறுகொண்ட தோகைமஞ்ஞை யாடல்கண்டு கண்மகிழ்ந்து
சாறுகொண்டு மான்கணந் தயங்குநீர சாரெலாம்.
 

      (இ - ள்.) ஏறுகொண்ட கோவலர் - காளைகளையுடைய இடையர்கள், ஏந்து
தண்ணவக்குரல் - ஏந்தியுள்ள ஒரு கட்பறையின் ஒலியோடு, மாறு கொண்ட - மாறுபட்ட,
கோடியர் - கூந்தர்களுடைய, மணிமுழா முழங்கலில் - அழகிய மத்தளமும் முழங்குதலால்,
தூறுகொண்ட தோகை - அடர்ந்த தோகையையுடைய, மஞ்ஞை ஆடல்கண்டு - மயில்கள்
களித்தாடுதலைப் பார்த்து, கண்மகிழ்ந்து - கண்களித்து, மான்கணம் சாறு கொண்டு தயங்கும்
நீர - மான்கூட்டங்கள் திருவிழாக் கண்டு களிப்பன ஒத்தன, சாரெலாம் - இப்பக்கங்கள்
எல்லாம், (எ - று.)
     ஒருசார் கோவலரின் தண்ணவ இன்னிசை பரவ, ஒருசார் கூத்தரின் இன்னிசை பரவ,
மயிற்கணங்கள் ஒருசார் கூத்தாட, விழாக்கண்டு மகிழும் மகளிரைப் போன்று மான்
கணங்கள் கண்டும் கேட்டும் மகிழ்ந்தன என்றபடி.
 

( 224 )

 

797.

கார்மணந்த கானயாறு கல்லலைத் திழிந்தொலிக்கு
நீர்மணந்த நீள்கரை நிரைத்தெழுந்த 2நாணல்சூழ்
வார்மணற் பிறங்கன்மாலை வல்லிவிண்ட 3தாதணிந்து
தார்மணந்த வாரமார்ப 4யாகசாலை போலுமே.
 

     (இ - ள்.) கார்மணந்த கானயாறு - முகில்கள் சூழ்ந்துள்ள காட்டகத்தே யுள்ள யாறு,
கல்அலைத்து - மலைகளைவருத்தி, இழிந்துஒலிக்கும் - ஒழுகி ஆரவாரிக்கும், நீர்மணந்த
நீள்கரை - நீரைப் பொருந்திய அவ்வியாற்றின் நீண்ட கரையின்கண், நிரைத்தெழுந்த
நாணல்சூழ் - வரிசையாக முளைத்து வளர்ந்துள்ள நாணல்களாற் சூழப்பட்ட, வார்மணல்
பிறங்கன்மாலை - நீண்ட மணற்குன்றுகளின் நிரல். வல்லிவிண்ட தாதணிந்து - பூங்கொடிகள்
உதிர்த்த பூந்துகள் போர்க்கப்பட்டு, தார்மணந்த ஆரமார்ப - மாலையை அணிந்து
சந்தனந்திமிர்ந்துள்ள மார்பையுடையோனே!, யாகசாலைபோலும் - யாகசாலையை ஒக்கும், (எ - று.)

     கானயாற்றின் கரை நாணல் சூழ்ந்து மணற் பரப்போடே பூங்கொடிககள் மகரந்தத்தை
உதிர்த்துப் பரப்புதலாலே யாகசாலை போன்று தோன்றும் என்க.
 


     (பாடம்) 1. தணவக் குரல் - தணவ்வக்குரல். 2. நாணல. 3. தாதணிந்த. 4. வேள்விச்சாலை.