அரசனுடைய திறம் - செய்தியை, இனி விளம்பல் உற்றேன் - இனிக் கூறத் தொடங்குகின்றேன், (எ - று.) நம்பி அரிமாவைக் கொன்று மீண்டமை யுரைத்தாம்; இனி, அவற்குரிமையுடைய நங்கையை யீன்ற சடிமன்னன் செய்தியை உரைக்கத் தொடங்குகின்றோம்; என்று தேவர் தோற்றுவாய் செய்தனர் என்க. மாற்குரிய நங்கை தாதை என்றது, சடிமன்னன் தன்மகளை நம்பிக்கு மணஞ்செய்து கொடுத்த திறம் என்றதை விளக்கம் குறிப்பேதுவாக நின்றது என்க. |
(இ - ள்.) வான்உற்ற குழவித்திங்கள் - விசும்பிற்பொருந்திய பிறைத்திங்கள், முழை அகட்டுப்போந்து - குகையின் வயிற்றுள் புகுந்து, ஒளிமுற்றுவான் - ஒளிமுதிரும் பொருட்டு, முளைத்தபோலும் - இரண்டுருவாக முளைத்ததைப் போன்ற, எயிறு உடைமூரிச் சிங்கம் - பற்களையுடைய பெரிய சிங்கத்தை, மற்று அம்மால் அழித்தது எல்லாம் - அத்திவிட்டன் கொன்ற வரலாற்றை எல்லாம், வானம் ஆறாகச் சென்ற - விசும்பு வழியாகப் போன, ஒற்றனால் உணர்ந்து - தன் ஒற்றன் ஒருவனால் அறிந்து கொண்டு, வேந்தன் - சடிமன்னன், உவகையங்கடலுள் ஆழ்ந்தான் - இன்பக்கடலுள் மூழ்கினான், (எ - று.) சடிமன்னனால் ஏவப்பெற்ற ஒற்றன் திவிட்டநம்பி அரிமாவைப் பிளந்து கொன்ற செய்தியை அறிந்து வந்து சடிமன்னனுக்குக் கூறச் சடி மிகவும் மகிழ்ந்தான் என்க. |