(இ - ள்.) இன்இசை அமரர் பேர்கொண்டு - இனிய இசை வல்ல அமரர் பேர்கொண்டு, இயன்ற மாநகரம் - தோன்றிய பெரிய அமரபுரம் என்னும் நகரத்தை, காக்கும் - காவல் செய்பவனும், பொன்னவில் - பொன்னாலியன்ற, கடகம் பைம்பூண் - கடகம் என்னும் அணிகலனை யுடையவனும் புரந்தரன் அனைய மாண்பின் - இந்திரனை ஒத்த சிறப்புடை யவனும், மன்னவற்கு இளையவேந்தன் - சுவலனசடி வேந்தனுக்குத் தம்பியும், வயங்கு எரிதேர் பெயர் கொள்வோன் - திகழ்கின்ற நெருப்பும் தேரும் கூடிய சுவலனரதன் என்னும் பெயரையுடையோனும் ஆகிய அரசன், கன்னியைக்காக்கும் நீர்மை - சுயம்பிரபையைக் காத்துச் செல்லும் வண்ணம், கடற்படை பரப்பிச் சென்றான் - கடல் போலும் தனது பெரிய படையை அணிவகுத்துப் போனான், (எ - று.) சுவலனன் - நெருப்பு. சடிமன்னனின் தம்பியும், அமரபுரத்தரசனும், இந்திரன் ஒப்பானும் ஆகிய சுவலனரதன் என்பான், சுயம்பிரபையைக் காவல் செய்வானாய்ப் பெரும்படையோடு வந்தான், என்க. |
(இ - ள்.) அம் கலம் மலர்ந்த தோன்றல் - அழகிய அணிகலன்கள் திகழ்கின்ற பெரியோனும், அரிபுரத்தவர்கள் கோமான் - அரிபுரம் என்னும் நகரத்தார்க்கு வேந்தனும், பைந்தார் - பசிய மாலையை அணிந்தவனும், புலி பொலங்கொள் தேர் பெயர்கொள்வோன் - புலியும் தேரும் சேர்ந்துண்டாகிய வியாக்கிரரதன் என்னும் பெயரையுடையவனும், மங்கலக்களிற்றினான் தன் மருமகன் - நன்மை மிக்க யானைகளையுடைய சடிமன்னனின் மருகனும் ஆகிய மன்னன், மகரமுந்நீர்தங்கு ஒலிமிகுந்த தானையொடு - மகரமீன்களையுடைய கடலினது ஒலியினும் பார்க்க மிக்கொலிக்கும் படையோடு, கதிர் எறிப்பச் சார்ந்தான் - சோதி திகழும் படி அப்படைகளுடன் வந்து கூடினான், (எ - று.) புவி - வியாக்கிரம். தேர் - ரதம். புலிதேர் பேர்கொள்வோன் வியாக்கிரரதன் என்க. சடியின் மருமகனாகிய அரிபுரத்தரசன் வியாக்கிரரதன் என்பான் பெரிய படையோடே வந்தான், என்க. களிற்றினான்-சடிமன்னன். |